Published on 04/09/2018 | Edited on 04/09/2018

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான அலஸ்டர் குக் இந்தியாவுடன் ஒவலில் நடக்க இருக்கும் ஐந்துவது டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கியவர், இதுவரை 160 போட்டிகளில் விளையாடி12.254 ரன் (அதிகம் 294, சராசரி 44.88, சதம் 32, அரை சதம் 56) குவித்திருக்கிறார். இங்கிலாந்து அணியில் பல சாதனைகளை புரிந்தவர் என்ற அந்தஸ்தை கொண்டவர். 59 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர்களில் அலஸ்டர் ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்வு பெறப்போகிறேன் என்று தெரிவித்த அலஸ்டர் குக் அதனைத்தொடர்ந்து பேசியதாவது: இனியும் சாதிக்க என்னிடம் எதுவும் இல்லை. நான் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைகள் எனக்கு வசமாகியுள்ளன. இங்கிலாந்து அணிக்காக தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து நீண்ட காலம் விளையாட முடிந்ததை அதிர்ஷ்டமாகவும், பெரிய கவுரவமாகவும் நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே ஓய்வு பெறுவது பற்றி தீவிரமாக யோசித்து வந்தேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற இதுவே சரியான தருணம் என்றார்.