Skip to main content

மாணவர் வழிகாட்டி: தொலைதூர கல்வி முறையிலும் இன்ஜினியரிங் படிக்கலாம்! #6

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
students guidance

 

 

தொழிற்படிப்புகள் மட்டுமின்றி, எந்த ஒரு கல்வியையும் நேரடியாக வகுப்பறை பயிற்சி பெறுவதுதான் சிறந்தது. அங்கே, பல மாணவர்களின் சிந்தனைகளும் பகிர்ந்து கொள்ளவும், துறை சார்ந்த அறிவை விசாலாமாக்கி கொள்ளவும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது. உரையாடலுக்கு வழிவகுக்கிறது. எனினும், பணிக்கு சென்றுகொண்டே உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்காகவே இந்திய பல்கலைகளில் தொலைதூர கல்வித்திட்டமும் நடைமுறையில் இருக்கின்றன. கலைப்பாடப்பிரிவுகளை தொலைதூர கல்வித்திட்டத்தில் பயிலும் பலருக்கும் கூட, இன்ஜினியரிங் படிப்பையும் தொலைதூரக் கல்வி முறையில் படிக்க முடியும் என்ற தகவலை அறிந்து வைத்திருப்பதில்லை.

 

நேரடியாக கல்லூரி, பல்கலைகளில் சேர்ந்து படிக்கும்போது பி.இ., பி.டெக்., பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில முடிகிறது. அதுவே தொலைதூரக் கல்வித்திட்டத்தில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிப்போருக்கு ஏஎம்ஐஇ (AMIE - Associate Member of the Institution of Engineers) என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. உண்மையில், ஏஎம்ஐஇ படிப்பு என்பது பி.இ., பி.டெக்., படிப்புக்கு 100 சதவீதம் இணையானது. ஏஎம்ஐஇ பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கவும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 

 

ஏஎம்ஐஇ படிப்பில் கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டீரியல்ஸ் அண்டு மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், புரடக்ஷன் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் ஆகிய பத்து வகையான துறைகள் உள்ளன.

 

அடிப்படை கல்வித்தகுதி:

12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

 

படிப்பின் கால அளவு:

ஏஎம்ஐஇ படிப்பு என்பது 6 ஆண்டுகள் படிக்கக் கூடியதாகும். கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., படிப்புகள் நான்கு ஆண்டுகள் கொண்டவை எனில், தொலைதூரக் கல்வித்திட்டத்தில் வழங்கப்படும் ஏஎம்ஐஇ படிப்பு கூடுதலாக 2 ஆண்டுகள் சேர்த்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெற அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. 

 

தேர்வு முறை: 

+2 கல்வித்தகுதியுடன் ஏஎம்ஐஇ படிப்பில் சேருவோர் பகுதி-அ பிரிவில் 10 தாள்களும், பகுதி-ஆ பிரிவில் 9 தாள்களும் என 6 ஆண்டுகளில் மொத்தம் 19 தாள்கள் தேர்வு எழுத வேண்டும். அதுவே, டிப்ளமோ கல்வித்தகுதியுடன் இப்படிப்பில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் பகுதி-அ பிரிவில் 4 தாள்களும், பகுதி-ஆ பிரிவில் 9 தாள்களும் என ஆறு ஆண்டுகளில் மொத்தம் 13 தாள்களும் தேர்வு எழுத வேண்டும். இது தவிர ஆய்வுக்கூடம் மற்றும் புராஜக்ட் தேர்வுகளும் இருசாராருக்கும் உண்டு.

 

வேலைவாய்ப்பு: 

நாம் முன்பே சொன்னதுபோல பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு எந்த வகையிலும் ஏஎம்ஐஇ படிப்பும் குறைந்தது இல்லை. ஆகையால் இப்படிக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வெளிநாடுகளிலும் ஏஎம்ஐஇ படிப்பு செல்லத்தக்கது என்பதால், எந்த நாட்டிலும் வேலைவாய்ப்பை பெற முடியும். மேலும் விவரங்களை www.ieindia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.