Skip to main content

தமிழர்வீரம், தமிழ்விருந்து, தமிழின்பம் என்று தமிழர்கள் பெருமையை எழுதியவர்

Published on 02/03/2018 | Edited on 15/03/2018

செந்தமிழ்க்கு சேதுப்பிள்ளை என சுத்தானந்த பாரதியாரால் பாராட்டப்பட்டவர் சேதுப்பிள்ளை.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இராசவல்லிபுரம் என்கிற கிராமத்தில் வசித்த பிறவிப்பெருமாள் – சொர்ணம் தம்பதியின் மகனாக 1896 மார்ச் 2ந்தேதி பிறந்தார். செப்பறைத் திருமடத்தலைவர் அருணாச்சல தேசிகரிடம் நீதி நூல்கள், இலக்கிய நூல்கங்கள், சங்க இலக்கியம், புராணங்கள், சைவத்தமிழ்சுவடிகளை வாசிக்க கற்று தேர்ந்தார். பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் முறையான தொடக்ககல்வியை பயில தொடங்கினார். திருநெல்வேலி இந்து கல்லூரியிலும், பின்னர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் இளங்களை பட்டபடிப்பையும் படித்து தேர்ச்சி பெற்றார். தமிழறிஞர்கள் சுப்பிரமணியம், சிவராமன் இருவரும் சேதுப்பிள்ளை படித்த பள்ளி, கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களாக இருந்து தமிழ் கற்று தந்து அதன்மீது காதலை உருவாக்கினார்கள்.
 

sethu pillai


பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை மாணவராக படித்து தேர்வாகி அதே பச்சையப்பா கல்லூரியில் தமிழ்த்துறை வரிவுரையாளராக பணியாற்றினார். பணியாற்றிக்கொண்டே சென்னை சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்றார். வழக்கறிஞராக தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்தார். ஊருக்கு திரும்பியவருக்கு நெல்லையப்பர் என்பவருக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைத்தனர். நெல்லையை சேர்ந்த ஆழ்வார்ஜானகி வாழ்க்கை துணைவியாக கைப்பிடித்தார்.

1923ல் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். பொதுமக்கள் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராகவும், பின்னர் நகரமன்ற துணை தலைவராகவும் பதவிக்கு வந்தார். ஆனால், அதைவிட தமிழ் மீது அவருக்கு இருந்த பற்றால் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.
 

sethupillai


1936ல் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியில் அமர்த்தியது. 1961 வரை தமிழ்த்துறை பேராசிரியர், துறைத்தலைவர் பதவிகளை வகித்து தமிழ் இலக்கண, இலக்கியத்தை மாணவ செல்வங்களுக்கு புகட்டினார். 25 ஆண்டுகள் பணியாற்றியபோது இவரது பணி நாட்களை பாராட்டி வெள்ளிவிழா கொண்டாடியது பல்கலைக்கழகம்.

சென்னை வானொலி நிலையம், புதுவை வானொலி நிலையம், திருச்சி வானொலி நிலையங்கள் வழியாக இலக்கண, இலக்கிய உரை நிகழ்த்துவார் சேதுப்பிள்ளை. பிற்காலத்தில் அது நூலாக வெளிவந்தது. உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் எழுதியுள்ளார். திருவள்ளுவர் நூல் நயம் என்கிற கட்டுரையே இவர் எழுதிய முதல் நூலாகும். அதன்பின் சிலப்பதிகார நூல்நயம், வழிவழி வள்ளுவர், பாரதியார் இன்கவித்திரட்டு போன்ற இவரது பல நூல்கள் வெளிவந்தன.
 

sethu pillai book


தமிழின்பம் என்கிற நூலுக்கு இந்தியரசு சாகித்திய அகதாமி விருது வழங்கி கவுரவித்தது. தமிழர்வீரம், தமிழ்விருந்து, தமிழின்பம், மேடைப்பேச்சு போன்ற இவரது பல நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழ்இன்பம் என்கிற நூல் மலேசியா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்த்துறை மாணவர்களுக்கு பாட நூலாக வைத்திருந்தது.

அவரது உரை நடைகளில் அடுக்கு தொடர் வார்த்தைகளும், எதுகை, மோனையும் நிரைந்திருக்கும். பேச்சும் அப்படியே. இவரது இலக்கிய உரையை கேட்ட தருமபுர ஆதினம் அதில் மனதை பறிக்கொடுத்து அவரது சொல் வளத்தில் மயங்கி சொல்லின்செல்வர் என்கிற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். இவர் பணியாற்றிய சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டமும், இலக்கிய பேரறிஞர் என்கிற பட்டத்தை வழங்கி கவுரவித்தது. 1961 ஏப்ரல் 25ந்தேதி தனது 65வது வயதில் மறைந்தார் சேதுப்பிள்ளை.

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.