Skip to main content

சுபம் தரும் சுகராத்திரி; தீப ஒளித் திருநாள் கொண்டாட்டம்!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

diwali celebration

 

ஆன்மிக ரீதியிலான விழாக்களும் கொண்டாட்டங்களும் நம் இந்திய தேசத்திற்கே உரிய தனிச்சிறப்பு. புராண காலத்திலேயே வளர்ந்த நாடாக, செல்வச் செழிப்புமிக்க நாடாகத் திகழ்ந்தது இந்தியா. நம் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காக ஆயிரம் ஆண்டுகளாக அந்நியர்கள் அடிமைப்படுத்திய போதும், அவர்களால் நம் பண்பாட்டுச் சிறப்பைக் குறைக்க முடியவில்லை. செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அவர்களால் நம் மக்களின் ஆன்ம உணர்வை அழிக்க முடியவில்லை. அதற்கு உதாரணம், நம் மண்ணில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களே. அவ்வகையில், புராண காலந்தொட்டு இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் மாபெரும் தித்திக்கும் திருவிழா தீபாவளி.

 

திரேதாயுகத்தில் திருமால் வராக அவதாரமெடுத்து பூமியைத் துளைத்துச் சென்றபோது, அவரின் ஸ்பரிசத்தால் தோன்றியவன் நரகன். நிலமகளின் குழந்தையான நரகனின் இயற்பெயர் பௌமன். பௌமன் என்பதற்கு பூமியின் புதல்வன் எனப் பொருள். ஹரிவம்சத்தில் பூமாதேவி - பிரஜாபதி என்கிற தம்பதிக்குப் பிறந்த முதல் குழந்தையான இவன் பிறப்பால் சுரனோ, ராட்சசனோ அன்று. வளர்ந்து பெரியவனானதும் பிரம்மாவைக் குறிந்து கடுந்தவம் புரிந்து தன் தாயைத் தவிர, வேறெவராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால், தீய குணங்கள் கொண்டவனாக மாறி அசுர நிலையை அடைந்து, நரகாசுரன் ஆனான். புராண காலத்தில், இமயமலைப் பகுதியின் பூர்வீகக் குடிகளாக விளங்கியவர்கள் கிரட்டா இன மக்கள். சிவபெருமானை முதன்மைத் தெய்வமாக வழிபட்டு வந்தவர்கள். வில் வித்தையில் சிறந்து விளங்கிய இவர்கள் ‘தனவா' என்ற வம்சப் பெயரில் இமயமலைப் பகுதியை ஆண்டு வந்தனர்.

 

அப்போது உலகையே ஆள விரும்பிய நரகாசுரன், தனவா வம்சக் கடைசி மன்னரான கட்டகாசுரனை வீழ்த்தி பதவிக்கு வந்தான். தென்கிழக்கு நாடுகளையெல்லாம் வென்று தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான். ‘ப்ராக்ஜியோதிஷபுரம்’ என்ற தலைநகரை உருவாக்கி, காமரூபம் என்ற பெயரில் நாட்டை ஆட்சி செய்தான். ‘ப்ராக்' என்பதற்கு கிழக்கு திசை என்பது பொருள். ‘ஜ்யோதிஷபுரம்' என்பதற்கு பிரகாசமான நகரம் என்பது பொருள். ‘கிழக்கிலுள்ள ஒளி மிகுந்த நகரம்’ என்னும் பொருளில் இவ்விதம் பெயர் சூட்டிய அவன் கொடுங்கோல் ஆட்சிபுரிந்து வந்தான்.

 

பின்னர், பகுமா என்ற வம்சத்தைத் தோற்றுவித்தான். தன்னுடைய வழித்தோன்றல்களை பூமிப் புத்திரர்கள் என்றும், பூமி வம்சாவழியினர் என்றும் கூறிக்கொண்டான். பிரம்மாவிடம் பெற்ற வரம், பௌமனை கர்வம் கொள்ளச் செய்தது. இந்திரனின் குடையைப் பிடுங்கிச் சென்றான். மேலும், அவன் தாயாகிய வானத்தின் தேவதையான அதிதியின் காதணிகளைக் கவர்ந்து சென்று அவமானப்படுத்தியதோடு, அவரது நாட்டையும் பிடுங்கிக் கொண்டான். இவ்விதம் அவனுடைய அட்டூழியங்கள் தொடர்ந்தன.

 

சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த நரகாசுரன், காமாக்யாதேவியை மணந்து கொள்ள விரும்பினான். அவளிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ ஓர் உபாயம் செய்தாள். ஒரே இரவில் தனக்கு மலை மீது கோவில், மலைக்குச் செல்ல பாதை, குளம் கட்டினால் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறினாள். அன்றிரவே நீலாசல் மலையில் கோவில் அமைக்கும் பணியைத் தொடங்கினான். கட்டுமான பணி விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது சேவலைக் கூவச் செய்தாள் காமாக்யா தேவி. விடிவதற்கு முன்பே பணியை நிறுத்தினான். விடிந்த பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, தேவி மீது கடுங்கோபம் கொண்டான். இதனால் கோவிலுக்கு யார் சென்றாலும் அவர்களைத் தடுத்தான். ஒருமுறை வசிஷ்டர் காமாக்யா கோவிலுக்கு வந்தபோதும் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தினான். நரகாசுரனின் செயலால் கோபமுற்ற வசிஷ்டர், அவன் உயிரோடிக்கும் வரை கோவிலுக்கு வரமாட்டேன் என்றும், தேவியால் மரணமடைவான் என்றும் சபித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

 

பிரம்மாவிடம் பெற்ற வரமும், வசிஷ்டரின் சாபமும் ஒருங்கே பலிக்கத் தொடங்கின. தேவர்களும் முனிவர்களும் நரகாசுரனின் தொல்லை தாங்க முடியாமல் மகா விஷ்ணுவிடம் முறையிட முடிவெடுத்தனர். அப்போது, பகவான் கிருஷ்ணாவதாரமெடுத்து துவாரகபுரியிலிருப்பதை அறிந்து, அங்கு சென்று முறையிட்டனர். அவர் சத்தியபாமாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு போருக்குப் புறப்பட்டார்.

 

கிருஷ்ணர், சங்கு ஊதி நரகாசுரனை போருக்கு அழைத்தார். யானை மீது அமர்ந்து வந்தான் நரகாசுரன். சாரதியாக சத்திய பாமா இருக்க, தேரில் வந்தார் கிருஷ்ணர். நரகாசுரன் அமைத்திருந்த மலைக் கோட்டை, ஆயுதக் கோட்டை, தண்ணீர்க் கோட்டை, நெருப்புக் கோட்டை, வாயுக் கோட்டை என்று ஒவ்வொன்றாகத் தகர்த்து அவனை நெருங்கினார் கிருஷ்ணர். நேருக்கு நேர் வந்தபோது நரகாசுரனின் அம்பு பட்டு மயக்கமுற்றதுபோல கீழே விழுந்தார். தம் கணவரின் நிலை கண்டு ஆவேசமடைந்த பாமா சட்டென்று அம்பெய்து நரகாசுரனைக் கொன்றாள்.

 

சாகும் தறுவாயில் நரகாசுரனுக்கு, அம்பெய்தது தன் தாய் என்கிற விஷயமும், பிரம்மாவிடம் தான் பெற்ற வரமும் நினைவுக்கு வந்தன. அப்போது மகனிடம் உன் கடைசி ஆசை என்னவென்று சத்திய பாமா கேட்க, “விளக்கேற்றக் கூடாதென்று மக்களைத் தடை செய்தேன். எனவே, என்னுடைய மரணத்தை துக்க நாளாக அன்றி, அனைவரும் விளக்கேற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்'' என்று கூறியவாறே நரகாசுரன் உயிர் பிரிந்தது.

 

உடனே நரகாசுரன் வசமிருந்த அதிதியின் காது வளையம், நாடு, இந்திரனின் குடை ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்தார் பூமாதேவியான சத்தியபாமா. அதிகாலையில் வதம் முடிந்ததும் கிருஷ்ணர் எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். இந்நிகழ்வே தீபாவளிக் கொண்டாட்டமாக மாறியது. தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியது நரகாசுரனின் மகனான பகுதத்தன் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி திதியில் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். எனவே இந்த தினம் நரக சதுர்த்தசியாகவும் கருதப்படுகிறது.

 

தீயவன் ஒருவன் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் கொண்டாடத் தொடங்கியதே தீபாவளிப் பண்டிகை. இறைவன் ஜோதிமயமானவன் என்பதை உணர்த்தவும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, பித்ருலோகத்திலிருந்து பூலோகம் வந்திருக்கும் நம் முன்னோர்களுக்குப் படையலிட்டு வழிபாடு செய்து, அவர்கள் மீண்டும் எம லோகத்துக்குச் செல்லும் வழியில் வெளிச்சம் இருக்கவேண்டும் என்பதற்காக தென்திசை நோக்கி அவரவர் வீட்டிற்கு வெளியே வாசலில் தீபமேற்றினால் முன்னோர்கள் ஆசி கிட்டும்; நோய் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பதும் ஐதீகம்.

 

சூரியனின் மனைவியான உஷத் தேவதை, தீபாவளியன்று சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் உலா வருவதாகவும், ஒவ்வொருவர் வீட்டின் முன்பு நின்று செல்வதாகவும், அப்போது பெண்கள் நீராடி, தூய ஆடையணிந்து வீட்டு முற்றத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்துக் கோலமிட்டு வரவேற்றால், சகல சம்பத்தும் கிட்டும் என்பதும் ஆழ்ந்த நம்பிக்கை. அன்று அதிகாலையில் சேமித்து வைக்கப்படும் நீர் வெதுவெதுப்பாக இருப்பதும் உஷத் வருகையால்தான் என்பதும் ஐதீகம். இந்நாளில் ஓசோன் மண்டலம் அடர்த்தியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

தீபாவளியன்று லஷ்மியை வழிபட்டு பேரருளுக்குப் பாத்திரமாகலாம். காலையில் நீராடி, மகாலட்சுமியைப் பூஜித்து, தீபங்களை வீட்டின் பல இடங்களில் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம் கிட்டுமென விஷ்ணு புராணம் கூறுகிறது. தீபாவளியன்று நீரில் கங்கை நதி கலந்திருப்பதாக ஐதீகம். கங்கை நம் பாவங்களை போக்கிடுபவள். இந்நாளில் நீராடுவதை புனித நீராடல் என்பர். எனவே தான்  ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?' எனக் கேட்பது வழக்கம். ‘ஜலே கங்கா தைலே லஷ்மி' என்கிறது துலா மகாத்மியம். நீரில் கங்கையும், எண்ணெய்யில் லஷ்மியும் வாசம் செய்வதாக ஐதீகம். உடலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் உடலும் உள்ளமும் மாசு நீங்கி புனிதமாகும். இதனை ‘தோஷ அபநயனம்' என்கிறது மற்றொரு சமஸ்கிருதக் கூற்று. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தருவதுதான் கங்கா ஸ்நானம்.

 

தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசி மாதம் அடைமழை பெய்யும். பகல் பொழுது குறைவாக இருக்கும். இரவுப் பொழுது அதிகம். இருள் அதிகமான இந்நாளில் தீபமேற்றினால், நல்ல வெளிச்சம் இருக்கும். பார்க்க கண்களுக்கும், சுவாசிப்பதால் உடலுக்கும் ஏராளமான நன்மைகள் உண்டு. மழைக் காலத்தில் வீடு, வீட்டுத் தோட்டமருகில் பூச்சிகள், விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமிருக்கும். பட்டாசு வெடிப்பதன் மூலம் இவை அங்கிருந்து நகர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

 

திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தீபாவளியன்று ‘ஜாலி அலங்கார’ வைபவம் சிறப்பாக நடக்கும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் வாசிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்காரமாகும்.

 

அமராவதி நகரிலுள்ள (தற்போதைய ஆந்திர மாநிலம்) பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் ‘தீபாவளி தின்னே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (தஞ்சாவூர்) பாபநாசத்திலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கல்வெட்டு ஒன்றில் ‘அபிநவ தீபாவளி வல்லப' என்று சோழ மன்னன் தன் பெயரைப் பொறித்துள்ளான். திருவேங்கடத்தில் (திருப்பதி -திருமலை) ‘உகாதி தீபளிகை நாள் அதிரசப் படி' என்று குறிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் கயிலையில் சிவன் - பார்வதி சொக்கட்டான் ஆடினார்கள் என்பதை நினைவூட்டவே, குஜராத் மக்கள் தீபாவளி இரவில் சொக்கட்டான் ஆடுகிறார்கள். குபேர பூஜை செய்தும், புதுக் கணக்குத் தொடங்கியும் வழிபடுகிறார்கள். சிறுவர்கள் பட்டம் பறக்கவிட்டு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

 

பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்துடன் வெளிப்பட்டவர் தன்வந்திரி. ஆயுர்வேதத்தைத் தோற்றுவித்த இவர் தீபாவளியன்றுதான் வெளிப்பட்டதாக ஐதீகம். இதன் நினைவாக பீகார் மக்கள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ‘தன்தெராஸ்' என்னும் பெயரில் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கிறார்கள். மௌரியப் பேரரசர் அசோகன் தமது திக்விஜயம் முடிந்து திரும்பி வந்த நாளில் பீகாரில் தீபங்களை ஏற்றி மக்கள் வரவேற்றுள்ளனர்.14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து இராம பிரான் நாடு திரும்பியபோது, மக்கள் தீபங்களேற்றி வரவேற்றுள்ளனர். சீதாப் பிராட்டியை இராவணனிடமிருந்து இராம பிரான் மீட்டு வந்த நாள் தீபாவளி என்பதும் உத்தரப் பிரதேச மக்களின் நம்பிக்கை. அன்னப்பூரணியையும் உத்தரப் பிரதேச மக்கள் தீபாவளியன்று பூஜிக்கின்றனர்.

 

இமாச்சலப் பிரதேச மக்கள் கோபூஜை செய்து கொண்டாடுகின்றனர். மும்பையில் லஷ்மி பூஜை செய்து வழிபடுகின்றனர். தீபாவளியன்று மேற்கு வங்க மாநில மக்கள் ‘மகா நிசா’ என்னும் பெயரில் காளியைப் பூஜித்து வழிபடுகின்றனர். ‘சுகராத்திரி’ என்று வாத்சாயனார் குறிப்பிட்ட தீப ஒளித் திருநாளை நம் பாரத தேசம் மட்டுமன்றி உலகமே கொண்டாடுகிறது.