Skip to main content

கோவிட் 19 பிடியில் இருந்து விடுதலை எப்போது?

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

 


2020 காலக்கட்டத்தில் மனிதர்கள் உயிர்க்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பகை நாட்டினரின் படையெடுப்புக்குப் பயந்து மக்கள் இவ்வாறு ஒளிந்து மறைந்து வாழ்ந்ததாக சரித்திரத்தில் படித்திருக்கிறோம். ஆனால் தற்போதைய நடைமுறையில் அனுபவித்தே வருகிறோம். கரோனா என்னும் நுண்ணுயிர் கிருமி நம்மை ஓரிடத்தில் முடக்கி வைத்துவிட்டது. இது சம்பந்தமாக சில ஜோதிட செய்திகள். 

 

3333



சூரியன் : சித்திரை மாதத்தில் உச்சமாகும் இவரை உச்ச செவ்வாய் பார்ப்பதால் சூரியன் பலமிழந்து விடுகிறார். எனவே உலக மக்கள் ஆரோக்கிய குறைவை உணர்வர். செவ்வாய் மே 4 கும்ப ராசிக்கு நகர்ந்தவுடன் மறுபடியும் சூரியன் அதாவது சித்திரை 22ஆம் தேதிக்கு பிறகு தனது உச்சநிலையில் பிரகாசிப்பார். இதன் காரணமாக மே 4ஆம் தேதிக்கு பிறகு மக்கள் கொஞ்சம் நிம்மதி அடையக் கூடும். 
 

செவ்வாய் : இவர் மகரத்தில் உச்சமாகி நீச குருவையும் உச்சமாகும் விதத்தில் உள்ளார். (குரு நீசத்தில் வக்ரம் - உச்சம்).
 

எனவே இரு உச்சக்கிரக சேர்க்கைகள் மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பது ஜோதிட பழமொழி. இது மே 4ஆம் தேதி, செவ்வாய் மகரத்தை விட்டு நகர்ந்தவுடன் ஓரளவு சரியாகும். 
 

சனி: இவர் நிலை ரொம்ப குழப்பமாகவே உள்ளது. இவர் தனுசில் கேதுவுடன், ராகு பார்வையில் உள்ளாரா? அல்லது மகரத்தில் ஆட்சியாகி செவ்வாய், குரு என்ற உச்ச தன்மை பெற்ற கிரகங்களுடன் உள்ளாரா? எந்த இடத்தில் இருந்தாலும், சனியால் மக்களுக்கு மகத்தான நன்மை செய்யும் நிலை இல்லை. மக்களுக்கு தீமை செய்யும் நிலையில் உள்ளார். மேலும் இவர், இந்த வருட கடைசி வரை உத்ராடம் எனும் சூரிய சாரத்தில் செல்வதால் அதிக நன்மை தர இயலாது. (சனியும் சூரியனும் பகை)
 

கேது : இவர் மூல நட்சத்திர எனும் சுய சாரத்தில் செல்வதால், அதிக கெடுதிகளை செய்வார். மூலம் அழிவுக்குரிய நட்சத்திரம் ஆகும்.
 

ராகு : ராகு ஆகஸ்ட் 19 முதல் ஏப்ரல் 27 வரை ( திருக்கணிதப்படி செப்டம்பர் 14 - மே 22) தனது சுய நட்சத்திரமான திருவாதிரையில் செல்வார். திருவாதிரை என்பது ராகுவின் சொந்த நட்சத்திரம். இந்த திருவாதிரை நட்சத்திரம் என்பதின் மறுபெயர் கண்ணீர் துளி. அதாவது மற்றவர்களின் கண்களில் கண்ணீர் பெருகும் அளவிற்கு துன்பம் தருவார் என்று அர்த்தம் ஆகிறது. வேகமான நட்சத்திரம் மற்றவரை துன்பத்தில் ஆழ்த்துவது, அழிப்பதையே குறிக்கோளாக கொண்டது. இவர் போகும் இடமெல்லாம் அழிவையும், நாசத்தையும் செய்வார். மனஉளைச்சலைச் தரும் இந்த நட்சத்திரத்தின் தெய்வம் ருத்ரன். 

 

34444


 

ஆக இந்த குணம் கொண்ட நட்சத்திரத்தின் இதே அழிவு குணம் கொண்ட ராகு செல்லும்போது உலகையே அழித்து நாசம் செய்கிறார். 
 

உடனே உங்களுக்கு ஒரு கோபம் வரும். இதை முன்னேயே சொல்வதற்கென்ன? 
 

ஜோதிடர்களில் பெரும்பாலோர், ஆட்சி பெற்ற குரு பார்வை, ராகுவிற்கு உள்ளது. அதனால் நல்லதே நடக்கும் என தீர்மானமாக நம்பிவிட்டோம். ஆனால் ராகு, மிக பலமாகி விட்டார் போலும். குருவை கண்டுகொள்ளவேயில்லை.
 

அனேகமாக இந்த கரோனா கடந்த 2019 ஆகஸ்ட் 19ஆம் தேதியே தொடங்கியிருக்கும். ஒருவருவரும் வெளிப்படுத்தவில்லை. ஒரு வழியாக ராகு, வைகாசி 9 மே 22 அன்று மிருகசீரிடம் 4ம் பாதத்திற்கு மாறுவார். அதன் பிறகு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை இடர்பாடாக இருக்கும். 
 

மேலும் சூரியன் ஆடி 1ஆம் தேதி ஜூலை 16ஆம் தேதி கடகத்திற்கு மாறுவார். அப்போது உலகமே கால ஸர்ப தோஷ பிடியிலிருந்து விடுபட்டுவிடும். 
 

ஆக மே 4ஆம் தேதி முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு சீராகும். மே 22க்கு பிறகு சகஜ நிலை வந்துவிடும். ஜூலை 16ஆம் தேதி பழைய நிலைக்கு உலக வாழ்க்கை நடக்க ஆரம்பிக்கும். அதுவரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.
 

ருத்ரனையும், துர்க்கையையும் வணங்குதல் சிறப்பு. காஞ்சி பெரியவர், சீரடி சாய்பாபா, இராகவேந்திரர் மற்றும் நீங்கள் ஈடுபாடு கொண்ட சித்தர்கள்தான், இவ்வுலகை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவி செய்வர். சித்தர் வழிபாடு சீரான வாழ்வோட்டம் தரும். 


-ஆர். மகாலட்சுமி
 

 




 

 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

covid infection increased trichy womens admitted government hospital

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.