ஜிம்பாப்வேவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முதலில் இணைய சேவை முடக்கப்பட்டாலும் சிறிது நேரத்திற்குள் மீண்டும் சேவை வழங்கப்பட்டது. ஆனால், வாரம் முழுக்க ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளஙகளை மட்டும் அந்நாடு முடக்கியுள்ளது.
கடந்த ஜனவரி 12-ம் தேதி அன்று ஜிம்பாப்வே அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலயை 150 சதவீதம் உயர்த்தியது. அதாவது பெட்ரோல் விலையை 1.34 அமெரிக்க டாலரில் இருந்து 3.31 அமெரிக்க டாலர் எனவும், டீசல் விலையை 3.11 அமெரிக்க டாலர் எனவும் உயர்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு சமூக வலைதளங்களையும், இணைய சேவையையும் முடக்கியுள்ளது.