உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு ஃபேண்டஸி கதை ஹாரி பாட்டர். நாவலாக வந்து பெரும் வரவேற்பை பெற்ற இந்த கதை பின்னர் திரைப்படங்களாகவும் வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

இப்படி உலக புகழ் பெற்ற இந்த புத்தகத்தை பள்ளி நிர்வாகம் ஒன்று தடை செய்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளி நேற்று மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், இன்று முதல் ‘ஹாரி பாட்டர்’ புத்தககங்களுக்குப் பள்ளியில் தடை விதிக்கப்படுகிறது. எனவே அந்த புத்தகத்தை இனி யாரும் பள்ளி வளாகத்தில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து பள்ளி நூலகத்தில் இருந்த ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த தடை பலரையும் வியப்பில் ஆழ்த்தினாலும், இதற்கான காரணம் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புத்தகத்தை தடை செய்ததற்கான காரணம் பற்றி கூறியுள்ள பள்ளி, "இந்த புத்தகங்கள் கற்பனையாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாபங்களும் மந்திரங்களும் உண்மையானவை. இதை ஒருவர் படிக்கும்போது அவை தீய சக்திகளைக் கொண்டுவந்துவிடும். அமெரிக்காவில் இருக்கும் சில பேய் ஓட்டுபவர்களிடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர்களும் இந்தப் புத்தகங்களை அப்புறப்படுத்துமாறு பரிந்துரைத்தனர்" என கூறப்பட்டுள்ளது.
இந்த காரணம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டிய பள்ளியே, கதை புத்தகம் மூலமாக தீயசக்தி வரும் என கூறி மூடநம்பிக்கைகளை வளர்ப்பது தவறான விஷயம் என கருத்துக்கள் எழுந்து வருகின்றது. மேலும் இது உச்சகட்ட மூடநம்பிக்கை எனவும் அந்த பள்ளியை பலர் விமர்சித்து வருகின்றனர்.