Skip to main content

ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது!

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
Zafar Sadiq brother arrested

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. அதோடு ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கைது செய்தது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டியிருந்தது. இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று (12.08.2024) விசாரணைக்கு ஆஜரான முகமது சலீமை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முகமது சலீம் இன்று (13.08.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முகமது சலீமுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை என 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சார்ந்த செய்திகள்