விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை அடுத்துள்ள மேல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி(24). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்த சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அவலூர்பேட்டை போலீசார் பூபதி மீது வன்புணர்ச்சி, கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்து குமாரவேலு தீர்ப்பளித்தார்.
மேலும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 9 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.