Skip to main content

காதலியை பார்க்க சென்ற மாணவர் மரணம்..! விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை..!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

Young man passes away near srimushnam village

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள ஸ்ரீ நெடுஞ்சேரி எனும் ஊரைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் 22 வயது தேவராஜ். இவர், தொலைதூரக் கல்வி மூலம் கல்லூரி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் (19.06.2021) மாலை தன் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், தேவராஜனை பல இடங்களில் தேடி அலைந்தனர். 

 

அப்போது அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் தன்னுடைய காதலியைப் பார்த்துவிட்டு வருவதாக அருகிலுள்ள சாவடி குப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேவராஜ் உறவினர்கள் சாவடி குப்பம் கிராமத்திற்குச் சென்று தேடியுள்ளனர். அங்கு உள்ள விநாயகபுரம் சாலை பகுதியில் கல்லறை தோட்டம் அருகே தேவராஜ் சென்ற இரு சக்கர வாகனம் நின்றுள்ளது. அதன் அருகில் உள்ள கிணற்றின் அருகில் அவரது செருப்புகள், செல்ஃபோன், மூக்குக்கண்ணாடி மற்றும் அவரது இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவையும் அப்பகுதியில் கிடந்தன. 

 

ஆனால், தேவராஜனை காணவில்லை. இதனால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேவராஜின் சகோதரர் தீயரசன், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்ததோடு, ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்து அவர்கள் உதவியுடன் தேவராஜ் இருசக்கர வாகனம் நின்றிருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரை 2 மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி உள்ளனர். ஆனால், அதில் தேவராஜன் உடல் கிடைக்கவில்லை. 

 

இதையடுத்து, அருகில் உள்ள மற்றொரு கிணற்றில் தேடியபோது அவரது உடல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதற்கிடையில் தேவராஜ் தன் காதலியைப் பார்க்கச் சென்றபோது மாயமாகிவிட்டதால், அவரை யாரோ கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் வீசியிருக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால், நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை செய்தனர். "தேவராஜ் என்னை சந்திக்க வருவதாக செல்ஃபோன் மூலம் கூறினார். அதன்படி அவர் வருகைக்காக நான் ஓரிடத்தில் காத்திருந்தேன். ஆனால், அவர் வெகுநேரமாகியும் அங்கு வரவில்லை. அதனால் நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார். காதலியைத் தேடி வந்த தேவராஜன், கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தேவராஜன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து போட்டுள்ளனரா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.