Skip to main content

தவறான வாழ்க்கை! கொலையான உயிர்கள்! -பாட்டி உட்பட உறவினர்கள் கைது

Published on 23/08/2018 | Edited on 23/08/2018

தன் பேரன் கடற்கரைப் பாண்டியைக் கொன்ற வழக்கில் கைதாகியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கனகமணி. இந்த வயதில், கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? ஏடாகூட சமாச்சாரங்களே கொலைக்கான பின்னணியாக உள்ளது. 

murder

 

 

 

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருடைய மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தான். சரோஜாவின் தங்கையும், கடற்கரைப்பாண்டியின் சித்தியுமான பிரியா அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்தாள். ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் பிரியா மீது மூன்று வழக்குகள் உள்ளன. சித்தி பிரியாவின் தகாத நடவடிக்கையைக் கண்டித்த  கடற்கரைப்பாண்டி, தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தான். இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி பிரியா தூக்கில் தொங்க, தற்கொலைதான் என்று கருதிய குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.  

 

ஒருநாள் கடற்கரைப்பாண்டி போதையில் தன் அம்மா சரோஜாவிடம்  “சித்தியை நான்தான் கொன்று தூக்கில் தொங்கவிட்டேன்.” என்று உளறியிருக்கிறான். இந்த விஷயம், இறந்துபோன பிரியாவின் மகள் வின்சிலாவுக்குத் தெரிந்துவிட, பாட்டி சரோஜாவிடம் “உன் மகனை நீயே விஷம் வைத்துக் கொன்றுவிடு.” என்று நச்சரித்திருக்கிறாள். தன் மகனைக் கொல்வதற்கு  சரோஜா சம்மதிக்கவில்லை. 

 

 The relatives including grandmother arrested

 

 


கெட்டவளானாலும் பெற்றவளாயிற்றே! வின்சிலாவுக்கு ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே போனது. தன் தாய் மாமா செல்வத்தின் உதவியுடன் கடற்கரைப் பாண்டியைக் கொலை செய்வதற்கு ஆயத்தமானாள். இந்தத் திட்டத்துக்கு,  பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணியும் உடன்பட்டிருக்கின்றனர். துணைக்கு இன்னொரு ஆணும் இருந்தால் கொலையைக் கச்சிதமாகப் பண்ணிவிடலாம் என்ற நோக்கத்தோடு, பெரியம்மா செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பனையும் தயார்ப்படுத்திவிட்டு,  கொலை செய்வதற்கு நாள் குறித்தனர். இறந்த பிரியாவுக்கு 30-ஆம் நாள் விசேஷம் வைத்தனர். கடற்கரைப்பாண்டியும் வந்து கலந்துகொண்டான். அன்றிரவு, சரோஜாவுடன் மற்ற பெண்களும், பாட்டி கனகமணியின் வீட்டுக்கு தூங்கச் சென்றனர். இந்த நேரத்தில், செல்வமும் மாரியப்பனும் கடற்கரைப்பாண்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, வின்சிலாவின் டூ வீலரில் பிணத்தை எடுத்துச்சென்று, பக்கத்தில் உள்ள புதிய தாதிக்கண்மாயில் வீசிவிட்டு திரும்பினர். 

 


விடிந்ததும் மகன் கடற்கரைப்பாண்டியைத் தேடினார் சரோஜா. கண்மாயில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்துக் கதறினார். ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் தந்தார். போலீசார் விசாரித்தபோது, பிரியாவின் விசேஷத்துக்கு சம்பந்தமே இல்லாமல் செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பன் வந்தது உறுத்தியிருக்கிறது. விசாரணையில் கடுமை காட்டியவுடன், திட்டம் தீட்டியதையும் கொலை செய்ததையும் ஒத்துக்கொண்ட மாரியப்பன், அனைவரையும் காட்டிக்கொடுத்தான். பிறகு, 'நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் கடற்கரைப்பாண்டியைத் தீர்த்துக்கட்டினோம்’ என்று கனகமணி உள்ளிட்ட உறவினர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 

 

 

ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டுதல், சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், கொலையான கடற்கரைப்பாண்டியின் பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணி, அக்கா வின்சிலா, தாய்மாமன் செல்வம் மற்றும் பெரியம்மாவின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

 

 

வழி தவறிய வாழ்க்கையால், பிரியாவும், கடற்கரைப்பாண்டியும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உறவினர்களோ, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது