Skip to main content

பணி நேரத்தில் பெண் காவலர் தற்கொலை! 

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Woman police passes away in nagai

 

நாகையில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது காவலர்கள் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

திருச்சி மாவட்டம், உறையூர் அருகே மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகள் கவிப்பிரியா (வயது 27). இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல சாப்பிடுவதற்காக தான் தங்கி இருந்த அருகில் உள்ள காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்டநேரமாகியும், மீண்டும் அவர் பணிக்கு வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த சக போலீசார், கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்டு பிணமாக கவிப்பிரியா தொங்கிக் கொண்டிருந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கவிப்பிரியா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகையில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்