
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எதுமலை சாலை பகுதியில் கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடை நடத்திவருபவர் திருப்பதி. இவரும், இவருடைய மனைவி இளவரசியும் சேர்ந்து இந்தக் கடையை நடத்திவருகின்றனர்.
நேற்று (16.07.2021) மாலை வழக்கம்போல் கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தின் மூலம் சாறு பிழிந்துகொண்டிருந்தார் இளவரசி. அப்போது, கரும்புகளை எடுத்து இயந்திரத்தில் வைக்கும்போது, எதிர்பாராதவிதமாக இளவரசியின் துப்பட்டா கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா அவருடைய கழுத்தை நெருக்கியுள்ளது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளவரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்து அங்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.