விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான விக்ரமன் என்பவர் மீது இளம்பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், 'பிக் பாஸ்' எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவருமான விக்ரமன் என்பவர் மீது இளம்பெண் ஒருவர் சென்னை சைபர் கிரைம் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சில மாதங்களாகவே விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். குற்றச்சாட்டு தெரிவித்துள்ள இளம்பெண்ணுடன் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் இதற்கு விக்ரமன் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணை தமக்குத் தெரியாது என்று மறுக்காத போதும் அவருடன் தனக்கு நட்பு இருந்ததாக விக்ரமன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், அந்தப் பெண் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் உள்ள துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். 'லண்டனில் தங்கிப் படித்து வந்தபொழுது விக்ரமன் அறிமுகமானதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்ததாகவும், 13 ஆண்டுகளாகத் தாங்கள் பழகி வந்த நிலையில், இந்த வருடத்தின் ஜனவரி மாதம் லண்டனிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வந்த பொழுதும் கூட சென்னையில் கே.கே. நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். காதலிப்பதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதோடு தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமாக ஆறு பக்கம் கொண்ட புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் புகார் மீது விசாரணையைத் துவங்கியுள்ளனர். விக்ரமனின் வீடு கே.கே. நகர் பகுதியில் இருப்பதால் தி.நகர் காவல் நிலைய போலீசார் விசாரிப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.