
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், விலையைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று (04.11.2021) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு பற்றி பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “நமது பிரதமர் தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ. 5 மற்றும் ரூ. 10 குறைத்துள்ளார். பாஜக ஆளும் பல மாநில அரசுகளும் இதைப் பின்பற்றி, புதுச்சேரியில் பெட்ரோல் ரூ. 7-8 மற்றும் டீசல் ரூ. 9-10, கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் அரசுகள் ரூ. 7, உத்தரப்பிரதேசம் அரசு ரூ. 12, உத்தரகாண்ட் அரசு ரூ. 2 என குறைத்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.