Skip to main content

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் முடக்கமா?

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

Will J University, which was brought under AIADMK rule, be shut down?

 

நேற்று (29.06.2021) ஜெ. பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு, ராமதாஸ், மாவட்ட மாணவரணி சக்திவேல், ஜெ. பேரவை ராமதாஸ், நகர துணைச் செயலாளர் செந்தில் உட்பட பலரும் இருந்தனர். அங்கு வருகைதந்த சி.வி. சண்முகம் பத்திரிகை ஊடகத்தினரிடம், “கடந்த அதிமுக ஆட்சியில் வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். அதைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ. பல்கலைக்கழகம் என்று புதிதாக துவக்கப்பட்டது.

 

அதற்கு துணைவேந்தரும் நியமிக்கப்பட்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க இனிமேல் மீண்டும் பழைய முறைப்படி திருவள்ளுவர் பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அப்பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் வரையறை எல்லைக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில் விளம்பரம் செய்துள்ள நோக்கம் என்ன? வேலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்தபோது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க அங்கு விண்ணப்பித்தனர்.

 

மேலும், கல்லூரி சம்பந்தமாக பல்கலைக்கழகத்திற்கு வேலூர் சென்றுவர மிகுந்த சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ பல்கலைக்கழகம் என புதிதாக முறைப்படி துவக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. தற்போது ஏதோ உள்நோக்கத்துடன் மீண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை மேற்படிப்புக்காக மாணவர்கள் அணுக வேண்டும் என்று விளம்பரம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? மாணவர்களின் எதிர்காலம் கருதி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர, அதை முடக்க நினைப்பது தவறு. உயர்கல்வித் துறை செயலர் இச்செயலில் ஈடுபட்டுவருகிறார்.

 

இதனால் முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம் நல்ல பெயர் எடுத்து, மேலும் நல்ல பதவிகளைப் பெறும் நோக்கத்திலும், ஜெ பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் பல்கலைக்கழகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலர் செயல்படுகிறார். கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே உயர்கல்வி படிப்பதற்கான மாணவர்கள் சேர்க்கையை ஜெ. பல்கலைக்கழகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.