Skip to main content

“எங்கூட இல்லாமல் யாரு கூட இருக்கப் போற...” - சந்தேக கணவனை கொன்ற மனைவி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 wife who incident her husband

 

தென்காசி மாவட்டத்தின் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கட்டுமான தொழிலாளியான இவரின் மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் குடும்பத்தினருடன் இரவு பாலசுப்பிரமணியன் வீட்டில் தூங்கியிருக்கிறார். காலையில் அவரது வீட்டினருகே பாலசுப்பிரமனியன் தலையில் பலத்த காயங்களோடு பிணமாகக் கிடந்திருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. தெய்வம் மற்றும் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பால சுப்பிரமணியனை வீட்டுவாசல் அருகே கல்லால் தாக்கி 100 மீட்டர் தூரத்தில் உடலை இழுத்துப் போட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் இதில் வேறு நபர் ஈடுபாடு பற்றிய வாய்ப்பின்றிப் போகவே பாலசுப்பிரமணியத்தின் மனைவி திரவியக்கனியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து முரண்பாடான தகவல் கிடைத்திருக்கிறது. சந்தேகப்பட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், கணவரைக் கொலை செய்ததை மனைவி திரவியக்கனி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 

பின்னர் கைது செய்யப்பட்ட அவர் சம்பவம் குறித்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறாராம். பாலசுப்பிரமணியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும். மேலும் மனைவியைக் கணவன் சந்தேகப்பட்டதாகவும்., இதனால் தம்பதியருக்குள் தகராறு நடந்திருக்கிறது. சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் மனைவியை உறவுக்காக அழைக்க அதற்கு உடன்பட மறுத்திருக்கிறாராம். என்னுடன் சந்தோஷமாக இல்லாமல் வேறு யாருடன் இருக்கப் போகிறாய் என்று கேட்டவர் நடு இரவில் மனைவியைத் தாக்கியிருக்கிறார். ஆத்திரமடைந்த மனைவி கல்லால் அவரைத் தாக்கியிருக்கிறார். பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததால் பயந்து போன மனைவி, உடலை இழுத்துச் சென்று தெருவோரத்தில் போட்டுவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

 

அதிகாலையில் தனது கணவரை யாரோ அடித்துக் கொன்றதாக அவரது தம்பி சொல்ல, மனைவியும் ஒன்றும் தெரியாதது போல உடலைப் பார்த்துக் கதறியபடி நடித்தது போலீசின் விசாரணையில் தெரிய வர சிக்கிக் கொண்டார் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். இருப்பினும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என அவரிடம் விசாரணை போய்க் கொண்டிருக்கிறதாம். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்