Skip to main content

“பாரபட்சமின்றி துரிதமான நடவடிக்கையை எடுத்திடுவோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

"We will take swift action without discrimination" - Chief Minister M.K.Stalin

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. 

 

இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த பக்கிரிசாமி மீதான பாலியல் தொந்தரவு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம்’ கொண்டு வந்தார்.

 

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆறு வயது சிறுமி 11 ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று, தனக்கு வயிறு வலிப்பதாகச் சொல்லியுள்ளார். அதன்பிறகு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அச்சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

போக்சோ சட்டத்தின் கீழ் கவுன்சிலர் கைது!

 

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பக்கிரிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்து நிரந்தரமாகவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

 

இந்த அரசை பொறுத்தவரையில், ‘செய்தியை கேள்விப்படவில்லை; தொலைக்காட்சியில் தான் பார்த்தேன்’ எனச் சொல்லத் தயாராக இல்லை. செய்தி அறிந்த உடனேயே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அரசை பொறுத்தவரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர். அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனிதகுலத்திற்கு ஒரு அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம்.

 

அந்தவகையில் இதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமின்றி துரிதமான நடவடிக்கையை எடுத்திடுவோம் என்பதை நான் இந்த அவையில் உறுதியோடு பதிவு செய்கிறேன்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்