ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தரங்கெட்ட அண்ணாமலை எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்பொழுது அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன் பேசுகையில், ''கூட்டணி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. கூட்டணியில் பெரியண்ணன் வேலைக்கு இடம் இல்லை. அதில் சிறிய கட்சி பெரிய கட்சி அப்படி என்றெல்லாம் கிடையாது. பெரிய கட்சி என்பது இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையான பாஜகதான். இங்கு இருக்கக்கூடிய கட்சிகளை நாங்கள் குறைத்து எடை போடவில்லை. அவர்களும் எங்களை குறைத்து எடை போடக்கூடாது. எல்லோருக்கும் வெற்றியில் பங்கு இருக்கிறது. சி.வி. சண்முகம் செல்வதைப் போல நான்கு இடங்களில் நாங்கள் தான் வெற்றி பெற வைத்தோம் என்று தீர்மானம் போடுகிறார்கள்.
66 இடங்களில் நாங்களும் வெற்றிக்கு உதவினோம். 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்ற போதும் சி.வி. சண்முகம் வெற்றி பெறவில்லை. அது யார் குற்றம். கூட்டணி என்றால் எல்லோருக்கும் பங்கு இருக்கு. அதிமுகவின் தீர்மானத்தை எதிர்க்கிறோம். வருத்தப்படுகிறோம். அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மாபெரும் மரியாதை இருக்கிறது. அண்ணாமலையை பொம்மை என செல்லூர் ராஜு கூறுவது தான் கோமாளித்தனமாக உள்ளது. பேசிய பிறகு தான் என்ன பேசினோம் என்பதே சி.வி. சண்முகத்திற்கு தெரியாது. அண்ணாமலை எங்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்று பாடுபடுகிறார்'' என்றார்.