Skip to main content

அந்தமானிலிருந்து தென்னங்கன்றுகள் போர்க்கப்பலில் கொண்டுவந்து வழங்குகிறோம்- மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

NIRMALA SEETHARAMANM

 

அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள் போர்க்கப்பலில் கொண்டுவந்து விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நெடுவாசலில் புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்பு பேசினார். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் கடந்த சில நாட்களாக கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். 

 

இந்த வகையில் வெள்ளிக் கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் வந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் வந்திருந்தனர். மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

விழா பொது மேடையில் நடந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4062 கிராமங்களில் 47 ஆயிரம் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நகரம், கிராமங்களில் குடிதண்ணீர் சேதைவை பூர்த்தி செய்யும் வகையில் 4800 மின் பணியாளர்களைக் கொண்டு பணிகள் தீவிரமா நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து ஆயிரம் பணியாளர்கள் வந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

மேலும் மாவட்டத்தில் தென்னை 7 லட்சம், பலா 36 ஆயிரம் மரங்களும், தேக்கு ஒரு லட்சம், மா 500 ஏக்கர் இப்படி பல மரங்களும் விவசாய பயிர்களும் முற்றிலும் அழிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் எதிர்த்த போது ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறுத்தியதால் மக்கள் நன்றி சொல்கிறார்கள். அதே போல தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று பேசினார்.

 

கூட்டத்தில் பேசிய எச்.ராஜா.. வடகாடு, நெடுவாசல் பகுதி எப்பவும் கேரளாவின் சூழ்நிலையில் இருக்கும். இப்போது தென்னை மரங்கள் உள்பட அனைத்தும் அழிந்துள்ளது. கடவுளுக்கு ஒப்பானவர்கள் விவசாயிகள். அதனால்தான் சொல்கிறேன் விவசாயிகள் மனம் உடைய வேண்டாம். மத்திய அரசு துணை நிற்கும் என்றார்.

 

நெடுவாசல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் பேசிய தெட்சிணாமூர்த்தி.. விவசாயிகள் இன்று மரம், செடி, கொடி வீடு எல்லாம் இழந்து நிர்கதியாக நிற்கிறோம். ஹைட்ரோ கார்ப்பனை நிறுத்தியது போல தற்போது எங்கள் வாழ்வாதாரம் திரும்பபெற மத்திய, மாநில அரசுகள் உதவிகள் செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது. என்று கூறி கிராமத்தின் மொத்த பாதிப்புகளை கிராமத்தினர் மனுவாக கொடுத்தனர். அதில் ஒரு லட்சம் தென்னை, நெல், கரும்பு தலா 500 ஏக்கர், வாழை, சோளம் தலா 200 ஏக்கர் மற்றும் பல்வேறு மரங்கள் 200 ஏக்கரில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

 

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்.. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி பேசினார்.. அப்போது அவர் பேசியதாவது..

முதலில் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக விண்ணப்பம் கொடுக்கலாம். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள் பயனாளிகள் அனைவருக்கும் வீடு கட்ட நிதி வழங்கப்படும். 

 

தென்னை மரங்கள் அதிகமாக அழிந்துள்ளது. அவற்றை வெட்டி அகற்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மாற்றாக தென்னை கன்றுகள் நடவு செய்ய தமிழ்நாட்டில் கன்று கிடைக்கவில்லை என்றால் உடனடியாக ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, அல்லது அந்தமானில் இருந்து தென்னை கன்றுகளை போர்க்கப்பலில் தூத்துக்குடி கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் கன்று உற்பத்தி குறைவாக உள்ளது என்று சொன்னால் உடனடியாக தென்னை கன்றுகள் கொண்டு வருவோம்.

 

 

தென்னை வளர்ந்து 5 வருடத்தில் பலன் கொடுக்கும். அதற்குள் வேறு வருமானம் பெற ஊடுபயிர் செய்ய வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை சொல்வார்கள். மேலும் தற்போது மின்சாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை கிராமங்களில் நேரடியாக பார்த்து வருகிறேன். அதனால் தமிழக அரசு கேட்டதைவிட 80 மடங்கு அதிகமாக மண்எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு எடுத்து வந்து வழக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் யாரும் தன்னம்பிக்கை இழக்க கூடாது. பயிர்காப்பீடு செய்ய கால நீடிப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு தமிழக அரசே உடனடியாக காப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று பேசினார்.

 

 

    

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க. பரபரப்பு புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கோவை வாகனப் பேரணியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தி.மு.க.வின் மீது அவதூறுகளைப் பரப்பியதாக நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

அந்தப் புகாரில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 16.03.2024 அன்று மாலை 05.30 மணிக்கு யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய உண்மைகளைத் திரித்து விமர்சித்தார். அதாவது, ‘நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க’ எனப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

புதுச்சேரியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கும் மத்திய அமைச்சர்?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Union Minister Nirmala Sitharaman contest in Puducherry

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக நேற்று (03.03.2024) அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரிக்கு இன்று (04.03.2024) வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பா.ஜ.க.வினர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவினர் தெரிவித்த 3 வேட்பாளர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரும் இடம் பெற்றிருந்த நிலையில், மற்ற இரு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.