Skip to main content

சுட்டுக் கொல்லப்பட்டது என் தம்பி தானா? சந்தேகத்தை கிளப்பும் மாவோயிஸ்ட் கார்த்திக்கின் சகோதரா்!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

கேரளாவில் திங்கள் கிழமை அதிகாலை காட்டுக்குள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் மாணிக்கவாசகத்தை அடையாளம் காட்ட திருச்சி சிறையில் இருக்கும் அவரது மனைவி கலா  மற்றும் அவரது அக்கா சந்திராவை பரோலில் அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.

இந்தநிலையில்தான் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொருவர் கார்த்திக் என்று கூறப்பட்டது. அந்த கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - காரைக்குடி சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து – மீனா தம்பதிகளின் இளைய மகன் என்பது தெரிய வந்தது.

இது குறித்து கார்த்திக்கின் தாயார் மீனாவை அவரது வீட்டில் சந்தித்த போது..

 

 Was my brother shot? Karthik's brother provokes suspicion


நாங்கள் பெற்றோர்கள் வைத்த பெயர் கண்ணன். ஆனால் இப்ப கார்த்திக் என்கிறார்கள். 10 வருசத்துக்கு முன்னால திருப்பூர்க்கு வேலைக்கு போறதா போனான். அப்பறம் அவனை மாவோயிஸ்ட்னு புடிச்சாங்க அதுக்கு பிறகு ஒரிசா பக்கம் கொண்டு போனாங்க. அப்பறம் தமிழ்நாட்டுக்குள்ள அவனை அனுமதிக்கல அதனால் எங்கே இருக்கிறான். எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு தெரியல. எந்த தொடர்பும் இல்லை.

இப்ப திங்கள் கிழமை அதிகாலையில் கேரளாவுல காட்டுக்குள்ள நடந்த சண்டையில சுட்டுக் கொன்னுட்டதா சொன்னாங்க. உடனே செவ்வாய் கிழமை அங்கே போனோம். உடல் போஸ்ட் மார்டம் கொண்டு போயாச்சுனு சொல்லி காத்திருக்க சொன்னாங்க. ஆனா அதுக்கு பிறகு என்னை பார்க்க விடாம திருப்பி அனுப்பிட்டாங்க. கடைசியில என் மகன் முகத்தை கூட எனக்கு காட்டலய்யா என்று கதறினார்.

இந்த நிலையில் கண்ணன் என்கிற கார்த்திக்கின் அண்ணன் முருகேசன் நம்மிடம்..

நல்ல மார்ச்சிய சிந்தனையாளன், சமூக செயற்பாட்டாளன் என் தம்பி கண்ணன். 2007 ல் வேலைக்காக திருப்பூர் சென்ற இடத்தில் எதிர்பாராமல் அவன் தங்கி இருந்த அறையில் கூட இருந்தவர்களை நக்சல் என்று கைது செய்தனர். ஆனால் என் தம்பி கண்ணன் மேல ஒரு வழக்கு கூட இல்லை. அதனால் அவர் சொன்ன தகவல்படி துப்பாக்கி கைப்பற்றியதாக வழக்குபதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள். அதன் பிறகு ஒரிசா என்று பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று கடைசியில் 2010 ல் பிணையில் வந்தவனை எங்களுடன் தங்க அனுமதிக்காத போலீசார் திண்டுக்கல் மாட்டத்தில் காலை மாலை கையெழுத்து போட வைத்தனர். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்துவிட்டு வீட்டுக்கு வருவதைவிட நக்சலாகவே போறேனு போயிட்டான். அதன் பிறகு எங்களுடன் தொடர்பே இல்லை. சமூக செயற்பாட்டாளரான என் தம்பி கண்ணனை நக்சல் கார்த்திக்காக மாற்றியது இந்த போலீசும், அரசாங்கமும் தான்.

 

 Was my brother shot? Karthik's brother provokes suspicion


இப்ப திங்கள் கிழமை சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வந்தது. அங்கே போனால் சடலத்தை பார்க்க அனுமதிக்கவில்லை 2 நாட்கள் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாடி அனுமதிபெற்று சடலத்தை பார்க்க சென்றேன். ஆனால் அங்கே கிடந்த சடலத்தில் கண்கள் இல்லை, முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அதனால் அடையாளம் காண முடியவில்லை. அதனால தான் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள படம் கேட்டேன் தரல. அதனாலதான் சுட்டுக்கொல்லப்பட்டது என் தம்பி தானா என்ற சந்தேகம் எழுகிறது.

ஏதோ சதி நடப்பதை அறிகிறேன். அதனால் நீதிமன்றத்தை நாடி சடலத்தை பாதுகாக்கவும், மோதல் நடந்த போதும், சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கேட்டிருந்தோம். 4 ந் தேதி வரை சடலத்தை பாதுகாக்கவும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதற்கு 2 நாட்களும் அவகாசம் கொடுத்திருக்கிறது நீதிமன்றம். முழுமையாக எனக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே சடலத்தை வாங்குவோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.