Skip to main content

எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி

Published on 17/09/2018 | Edited on 17/09/2018

 

raja3

 

எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  காவல்துறையையும் நீதித்துறையையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசியதாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை அளித்துள்ளது.

 
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.  மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு மேடை அமைக்கப்படாமல் இருந்ததை கண்டு ஆவேசமாகி,  அங்கிருந்த போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.   இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.

 

 போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ராஜா பேசப்பேச, அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ  பதிவு.
’’வெட்கமா இல்லையா...  போலீசோட ஈரல் நூறு சதவீதம் அழுகிவிட்டது.  நான் ஒவ்வொரு இந்துக்கள் வீட்டு வழியாகவும் போவேன்.  முடிந்தால் தடுத்துப்பாரு.  ஹைகோர்ட்டாவது ம.......ராவது.  இந்துவை  டார்ச்சர் செய்யும் நீ இந்துவா?  போலீஸ் மொத்தமும் ஊழல்.  டிஜிபி வீட்டில் ரெய்டு நடக்கிறது.  வெட்கமா இல்ல...  இந்துக்கள் என்ன அனாதையா?   கிறிஸ்துவிடமும், முஸ்லீமிடம் லஞ்சம் வாங்கிட்டீங்க.  நான் தர்றேன் உங்களுக்கு லஞ்சம்.   இந்துக்களுக்கு விரோதமா இருக்காதீங்க.   இது தவறான கருத்து அல்ல.  இந்த இடத்தில் நான் ஸ்டேஜ் போடுவதை தடுக்க நீங்க யாரு.  உங்க டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்த அன்று நீங்க எல்லோரும் யூனிபார்ம்-ஐ கழட்டி போட்டுவிட்டு வீட்டுக்கு போயிருக்க வேண்டும்.  நான் எப்படி கீழ நின்னு பேச... எனக்கு ஸ்டேஜ் வேணும்.   ஐகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது....’’என்று பேசியுள்ளார் எச்.ராஜா.  
 

ஆனால், அந்த வீடியோ பொய் என்றும்,  தான் பேசியதை எடிட் செய்துள்ளார்கள் என்றும் மறுப்பு தெரிவித்தார் எச்.ராஜா. ஆனாலும் அந்த வீடியோ உண்மைதான் என்றும் எச்.ராஜாவை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இன்று வழக்கறிஞர்கள் பலர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபகள்  குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு முன்பு சென்று, எச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு தொடர வேண்டும் என்று புகார் கூறினர்.

அதற்கு நீதிபதிகள்,   ’’ எச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யாது.  ஆகவே, எச்.ராஜா மீது புகார் தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் அதை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.  அப்படி மனு தாக்கல் செய்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்’’என்று தெரிவித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The High Court ordered the Election Commission to take action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக சார்பில் சில விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

The High Court ordered the Election Commission to take action

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயனா அமர்வில் இன்று (15.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிடுகையில், “தேர்தல் விளம்பரஙகள் தொடர்பாக விதிமுறைகள் வகுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இது குறித்து வரும் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.