Skip to main content

‘வெகுஜன மக்களின் அன்பை நிரம்பப் பெற்றவர் விஜயகாந்த்’ - துரை வைகோ இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
'Vijayakanth was loved by the masses' - Durai Vaiko's obituary

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென் தமிழ்நாட்டில் மாடக்கூடல் மதுரை மாநகரில் பிறந்து தனது கடின உழைப்பாலும், திறமையாலும் திரைத்துறையில் உச்சத்தை தொட்டவர்தான் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த். தொடர் உடல்நலக் குறைவு மற்றும் நுரையீரல் அழற்சி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும், உச்சத்தையும் அடைந்தவர். குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார். நமக்கெல்லாம் ஒரே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதைப்போல, ஒரே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மட்டும்தான். அவருடைய அடையாளமாக இருந்தது மனிதநேயம். வள்ளல் தன்மை கொண்டவராக, ஏழை மக்களின் மீது பரிவு கொண்டவராக தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்.

'Vijayakanth was loved by the masses' - Durai Vaiko's obituary

திரையுலகில் பலரை அடையாளப்படுத்தியவர். பலருக்கு வாழ்வு தந்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரி பிரச்சனைக்காக திரையுலகினரை திரட்டி உண்ணாவிரதம் இருந்தவர். தமிழ் உணர்வும், தமிழீழப் பற்றும் கொண்டவர் விஜயகாந்த். அந்த உணர்வால்தான் தன் மகனுக்கு விஜய பிரபாரகர் என்று பெயர் வைத்தார். மதிமுக தலைவர் வைகோ மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். அரசியலில் அண்ணன் வைகோவுக்கு நான் ரசிகன் என்று சொன்னவர். தேர்தல் பிரச்சாரத்தின்போது கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்தார். அனைத்து தரப்பினராலும் அரசியல் எல்லைகளை கடந்து மதிக்கப்பட்டவர். வெகுஜன மக்களின் அன்பை நிரம்ப பெற்றவர். 'நல்ல மனிதர்' என்ற யாராலும் பெற முடியாத அடையாளத்தை பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ம.தி.மு.க சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.