
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தற்போது முரளிதரன் தன்னுடைய விளக்க கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, "தன்னுடைய பயோபிக்கில் நடிக்க வேண்டாம்; விலகிக் கொள்ளுங்கள்" என்று விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு, "நன்றி! வணக்கம்!" என்று ட்விட்டரில் விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்.