Skip to main content

தமிழகத்தில் உருவான புதிய மாவட்டம் - அதிருப்தியில் வேலூர் மக்கள்

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
k


தமிழகத்தின் 33 -வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது கள்ளக்குறிச்சி பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதி மக்களை அரசு மீது அதிருப்தியடைய வைத்துள்ளது.


வேலூர் மாவட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிகப்பெரிய மாவட்டம். காஞ்சிபுரம் அருகே தொடங்கி, தருமபுரி மாவட்டம் பர்கூர் அருகே முடிகிறது வேலூர் மாவட்டம். 5921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என 3 வருவாய் கோட்டங்கள், 13 வருவாய் வட்டங்கள், 20 ஊராட்சி ஒன்றியங்கள், 12 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் , 842 வருவாய் கிராமங்கள் கொண்ட மாவட்டமது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகள், 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.


1597ல் வேலூர் கோட்டை உருவாக்கப்பட்டு பலப்பல மன்னர்களின் கீழ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் வடாற்காடு மாவட்டம் என்கிற பெயரில் வேலூர், அரக்கோணம், வாலாஜா, திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி பகுதிகள் உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது.


மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் இதனை பிரிக்க வேண்டுமென திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர், போராட்டம் நடத்தினர். 1989ல் திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்கிற பெயரில் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டது.


அப்போது முதல் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதி மக்கள் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கித்தாருங்கள் எனக்கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக அதை திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தும் கண்டுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தலின்போதும் வேட்பாளர்கள் தனி மாவட்டமாக உருவாக்கித்தருகிறோம் என வாக்குறுதி தருவார்கள், வெற்றி பெற்றபின் அதை மறந்துவிடுவார்கள் இதுதான் வாடிக்கையாக இருந்துவந்தது.


கடந்த 25 வருடங்களில் வேலூர் மாவட்டத்தை விட சிறிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் போன்ற மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, எழுந்த வேகத்தில் அது அடங்கியது.


இந்நிலையில் 2019 ஜனவரி 8ந்தேதி, சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இது திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும் என போராடியவர்களை அதிரவைத்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

காலா படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
kaala


நாடார் சமுதாயம் குறித்த ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்கும்வரை காலா படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டது. இந்த வழக்கை 06.06.2018 புதன்கிழமை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

 

 

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மும்பையைச் சேர்ந்த திரவியம் நாடார் என்பவர் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது மகன் ஜவகர் நாடார் ஏற்கனவே ரஜினிக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 

 

 

 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி டி. ராஜா முன்னிலையில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்தர் ஆஜராகி காலா படத்தில் நாடார் சமுதாயத்துக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவற்றை நீக்க கோரியும், அதுவரை படத்துக்கு தடைவிதிக்க கோரியும் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். 

இதை ஏற்று கொண்ட நீதிபதி டி.ராஜா, மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் 06.06.2018 புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

 

 

 

Next Story

தமிழர்களே காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள்!- தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்!

Published on 01/06/2018 | Edited on 01/06/2018


நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள் என தமிழ்த்தேசிய  பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தங்கள் வாழ்வுரிமைக்குப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு, 13 பேரை சுட்டுக் கொன்றார்கள்; அறுபதுக்கும் மேற்பட்டோரை சுட்டுப் படுகாயப்படுத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் 30.05.2018 அன்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், இந்தப் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்தினார்கள் என்றும், இவ்வாறு போராட்டம் - போராட்டம் என்று நடத்திக் கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.

அரசின் கணக்குப்படி 20 ஆயிரம் மக்கள் பங்கெடுத்த போராட்டம் - உண்மையில் இதைப்போல் இரண்டு மடங்கு கூடுதலான எண்ணிக்கையில்தான் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்திய போராட்டம் என்று கொச்சைப்படுத்தியதன் மூலம் ரஜினிகாந்த் தன்னை மக்கள் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொண்டார்.

இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியதில் ஓர் உட்பொருள் உள்ளது. இப்போது 13 பேரைத்தான் சுடுகாட்டிற்கு அனுப்பியுள்ளோம். இனி போராட்டங்கள் தொடர்ந்தால் அங்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி தூத்துக்குடியில் செத்ததைவிட அதிக மக்களை சுடுகாட்டிற்கு அனுப்புவோம் என்ற உட்பொருளில் தான் ரஜினிகாந்த் அவ்வாறு கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மக்கள் விரோதி - தமிழர் விரோதி என்பதைப் புரிந்து கொண்டோம்! திரைப்படக் கொள்ளை வசூல் மட்டுமே அவரின் லட்சியம் என்று தெரிகிறது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். - மோடி குரலைத் தான் வெளிப்படையாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாக ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று தமிழ் நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க வேண்டும். காலா படத்தைப் பார்க்க மாட்டோம் எனத் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

கர்நாடகத்தைப் பாருங்கள்! காவிரிச் சிக்கலில் ஒப்புக்கு அரைகுறையாகத் தமிழ்நாட்டு உரிமை பற்றி ரஜினிகாந்த் பேசினார். அதற்காகக் கர்நாடகத்தில் காலா படம் திரையிட அனுமதியில்லை என்று ஒட்டு மொத்தக் கன்னடர்களும் அரசும் முடிவெடுத்துள்ளார்கள்.

தமிழர்களே ஏமாந்தது போதும்; விழித்துக் கொள்வீர்! கன்னட நாட்டு ரஜினிகாந்தின் காலா படத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காதீர்கள்!  “கருப்பு” என்பதை இந்தியில் “காலா” என்று பெயர் வைத்துள்ளார். தமிழ்த் திரைப்படத்திற்கு இந்திப் பெயரா? சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.