Skip to main content

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும்! கி.வீரமணி 

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
v


 உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தினை அவசர அவசரமாக மத்திய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றியது உள்நோக்கம் கொண்டது. இதனைப் புரிந்துகொள்ளாமல் சில எதிர்க்கட்சிகள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்ததற்குப் பிற்காலத்தில் அவர்கள் வருந்தவேண்டியிருக்கும் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள சட்ட நுணுக்கமான அறிக்கை:

 

ஒரு நாள் இரவில் (நவம்பர் 8, 2016) பண மதிப்பிழப்பு (Demonetisation) பிரதமர் மோடி அறிவித்தார்.
ஒரு நாள் இரவு நடுநிசியில் ஜி.எஸ்.டி. அமுலுக்கு வந்தது!
100 ஆண்டு வரலாற்றையும், பல்வேறு போராட்டங்களையும் வரலாறாகக் கொண்ட சமூகநீதி என்ற பெயரால் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினரான ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு - வேலை வாய்ப்பு, கல்வி  இரண்டு துறைகளிலும் அளிக்கப்படும் என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை இரண்டே நாட்களில் மக்களவை, மாநிலங்களவைகளில் நிறைவேற்றி - அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டு, 14.1.2019 முதல் அமுலாக்கத்திற்கு வந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் எதிர்க்கட்சிகள்

இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவ்வளவு அவசர (கோ)காலத்தில் ஒரு சட்டத் திருத்தம் இதற்கு முன் எப்போதும் நிறைவேறியதாகத் தெரியவில்லை!
தும்பை விட்டு வாலைப் பிடித்தவர்களைப்போல, எதிர்க்கட்சிகளில் தி.மு.க.வைத் தவிர மற்றவர்கள் எதிர்த்து வாக்களிக்காமல், ஓட்டுப் போட்டு நிறைவேற விட்டுவிட்டு, பிறகு இதன் உள்நோக்கம்பற்றி விசாரிப்பது - அண்மைக்கால அரசியல் விசித்திரங்களில் ஒன்று!
அ.தி.மு.க.வில் டாக்டர் தம்பிதுரை உரை பிரமாதம்; ஆனால், வெளியேறியது வேடிக்கையான வாடிக்கை!
எந்த ஒரு நல்ல செயலாக அது இருந்தாலும், அது உள்நோக்கத்துடன் (Malafide) செய்யப்பட்டால், அது ஏற்கத்தக்கதாகவே இருக்க முடியாது.
இப்படி இதைச் சொல்லும் எதிர்க்கட்சிகள் வரும் தேர்தலில் தங்கள் எதிர்ப்பை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். திசை திருப்பி, உயர்ஜாதியினர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காமற் போய்விடுமோ என்ற குழப்பம் கலந்த துணிவின்மை, அரசியல் தெளிவின்மையால் வாக்களித்துவிட்டு, வெளியே கைபிசைந்து, ஏதோ சமாதானம் சொல்லுகிறார்களே?

 

ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் 
வருந்தவேண்டிய நிலை ஏற்படும்!

உண்மையில் இட ஒதுக்கீட்டின் தத்துவமே வடநாட்டு தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்குப் புரிவதில்லை; உயர்ஜாதியினரையே ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும் எதிர்க்கட்சிகளும் கொண்டுள்ளதால் இந்த ‘‘விபத்து, ஆபத்து’’ ஏற்பட்டது! ஏற்படுகிறது!!
மாநிலங்களவையில் செலக்ட் கமிட்டிக்கு விரிவாக ஆராயப்பட இது விடவேண்டுமென்று கனிமொழி கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து- ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து சில எதிர்க்கட்சிகளும், ஆதரவளிக்கும் தன்மையில் வாக்களித்து, தோற்கடித்தது பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு வருந்தவேண்டிய முடிவாகும்! நியாயப்படுத்தப்பட முடியாத தவறு.
‘இது நீதிமன்றத்தில் நிற்காது’ என்பதை இப்போது அவர்கள் கூறுவது இன்னும் வேதனை நிறைந்த வேடிக்கையாகும்.

 

சமூகநீதியில் தெற்குதான் வழிகாட்டும்!

திராவிடர் இயக்கம், தந்தை பெரியார்தான் இதற்குக் கர்த்தாக்கள் - இவர்களிடம் பாடம் கற்காதவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் முழு பரிமாணமும் புரியாது - தெற்குதான் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டியது!
இப்போது அமுலுக்கு வந்துள்ள 124 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, செயலுக்கு வரும்பொழுது (103 ஆம் அரசியல் சட்டத் திருத்தமாகி உள்ள) இதன் சுய முரண்பாடு - நிலையில்லா பொருளாதார அடிப்படை அளவுகோலால் படாதபாடுபட்டு சீரழிவை சந்திப்பது உறுதி.

 

நாள் ஒன்றுக்கு ரூ.2,500 சம்பாதிப்போர் ஏழையா?

கிராமப்புற மக்களில் யார் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய் சம்பாதிக்கிறாரோ அவர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர் என்றும், நகர்ப்புறத்தில் 33 ரூபாய் சம்பாதிப்பவர்கள் அதேபோல, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர் (Below The Poverty Line - BPL). 
இப்போது மோடி அரசின் ‘‘உயர்ஜாதி ஏழை’’ நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் வருமானம் உள்ளவர். இட ஒதுக்கீட்டுத் தகுதி பெற வேலை வாய்ப்பில், உயர்கல்வியில் இட ஒதுக்கீடாம்.
மோடி அரசு - ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி 5 ஏக்கர் பூமி உள்ள விவசாயி ‘‘ஏழை!’’
எப்படி சிரிப்பது என்றே புரியவில்லை!

 

வருமான வரித்துறை என்ன சொல்லுகிறது?

மத்திய அரசின் வருமான வரி கணக்குப்படி, ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வருமானம் வந்தால், அவரிடம் வருமான வரி செலுத்துங்கள் என்று ஆணையிடும் உரிமை உண்டு.  இப்போது அறிவித்துள்ள ‘‘உயர்ஜாதி ஏழையின்’’ வருமானம் 8 லட்சம் ரூபாய் என்றால், மூன்று மடங்கு வருமான வரி செலுத்தும் தகுதி பெற்றவர் (Income Tax Assessee) ஆகத் தகுதி பெற்றவர் என்றால், இதைவிட கேலிக்கூத்து வேறு இருக்க முடியுமா?
அய்ந்து மாநில தேர்தல் தோல்வி, ஆர்.எஸ்.எஸ். கட்டளை - இவைகளால்தானே இந்தக் கூத்து. நீதிமன்றப் போராட்டம் ஒருபுறமிருந்தாலும், வீதிமன்ற எழுச்சி - மக்கள் எழுச்சி இனி முக்கியம்!   ‘‘ஒட்டகம் கூடாரத்திற்குள் மெதுவாக தலையை நுழைத்த கதை’’ இது!

 

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

தும்பை விட்டுவிட்ட எதிர்க்கட்சி நண்பர்களே, இனி வாலையாவது உறுதியாகப் பிடித்து முறுக்கிட, மாட்டைப் பணிய வைக்க மற்றவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் ஆதரவு தரத் தயங்காதீர்கள்.
இன்றேல், சமூகநீதி வரலாற்றில் உங்களுக்கு ஏற்பட்ட பழி - கறையைத் துடைக்கவே முடியாது. வரலாறும், அரசியல் சட்டமும் மன்னிக்காது, மறக்காது. காரணம், பீடிகையிலே சமூகநீதி வேறு, பொருளாதார நீதி வேறு, அரசியல் நீதி வேறு என்று பிரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை ஏனோ மறந்தீர்கள்! 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமையை மிஞ்சிய மாவட்ட அதிகாரம்! 

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
ddd

 

"கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து, அவற்றிற்குத் தனித்தனி மா.செ.க்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட முடியும்' என்ற கோரிக்கைக் குரல் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.விற்குள் பலமாக எழுந்தது. இரண்டு கழகங்களிலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதும், மேலும் சில மாவட்டங்களிலிருந்தும் இந்தக் குரல்கள் ஒலிக்கின்றன. குறிப்பாக, பழைய வடஆற்காடு மாவட்டத்தில்.

 

திருவண்ணாமலை மாவட்டம்

 

நம்மிடம் மனம் திறந்து பேசிய அந்த தி.மு.க. பிரமுகர் “"திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும், வடக்கு மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இதில் தெற்கு மா.செ.வாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தரணிவேந்தனும் உள்ளார்கள். இப்படி இங்கு இரண்டு மா.செ.க்கள் இருந்தாலும், வேலுவுடன் உள்ள சிலர், ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப் பாளர்களாகவே அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். வடக்கு, தெற்கு மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக இரண்டுமுறை அறிவாலயத்தில் ஆலோசனை நடந்தது. எனினும், ஏற்கனவே கட்சிப் பொருளாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் வேலு இருப்பதால், அவர் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்தைப் பிரித்து, மேலும் அவரை சங்கடப்படுத்த வேண்டுமா என்று தலைமை தயங்குகிறது. அவரை சமாதானப்படுத்தும் விதமாகத்தான் அவருக்கு தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மாவட்டம் பிரிப்பு பற்றிய கோரிக்கை கட்சியினர் மத்தியிலும் இப்போதும் இருக்கிறது.

 

தரணிவேந்தன் பொறுப்பாளராக இருக்கும் வடக்கு மாவட்டத்தில் கோஷ்டி சண்டை அதிகம். அதனால் அதனை கிழக்கு, மேற்கு என பிரிக்க தலைமை விரும்புகிறது. மேலும் மத்திய மாவட்டம் என ஒன்றை உருவாக்கி அதில் வடக்கு மாவட்டத்தில் உள்ள போளுர் தொகுதியையும், தெற்கு மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் தொகுதியையும் சேர்க்கலாம் என்று அறிவாலயம் யோசித்து வருகிறது'' என்கிறார் விரிவாகவே.

 

மத்திய மாவட்டம் என்று உருவானால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள எம்.பி அண்ணாதுரை, மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் கம்பன், போளுர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவரை மா.செ.வாக நியமிக்க வேலு சிபாரிசு செய்வார் என கூறப்படுகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என முடிவெடுத்தால் வடக்கு மாவட்டத்தில் முன் னாள் மா.செ சிவானந்தம், செய்யார் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன், செய்யார் வேல்முருகன் என பலரும் வேலுவிடம் பதவி கேட்கும் முடிவில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.விலும் மாவட்டம் பிரிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வடக்கு மா.செ.வாக தூசி.மோகன் எம்.எல்.ஏவும், தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் உள்ளனர். இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ என, வடக்கு மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என்றும், தெற்கு மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என்று புதிய மாவட்டங்களை உருவாக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்தது. முதல்வர் எடப்பாடி மற்றும் கொங்கு அமைச்சர்களுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் உள் ளன. தேர்தல் நெருக்கத்தில் மாவட்டம் பிரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், தெற்கு மாவட்டத்தில் உருவாகும் புதிய மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜன், மாணவரணி பீரங்கி வெங்கடேசன் போன்றோர் இப்போதே காய் நகர்த்திவருகின்றனர். வடக்கு மாவட்டத்தில் உருவாகும் புதிய மாவட்டத்துக்கு கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பால்கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பாரி.பாபு உட்பட சிலர் வரிந்துகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

வேலூர் மாவட்டம்

 

தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க.வில், வேலூர், காட்பாடி என இரண்டு தொகுதிகளைக் கொண்டு ஒரு மாவட்டமும், அணைக்கட்டு, குடி யாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் புறநகர் மாவட்டமும் உள்ளது. இதற்கு அப்பு, வேலழகன் என முறையே மா.செக்களாக உள்ளனர்.

 

தி.மு.க.வில் வேலூர் மாவட்டம் ஒன்றே ஒன்றுதான். இதனை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற குரலை கட்சியின் ஒரு தரப் பினர் பலமாக எழுப்புகின்றனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனோ, இதை விரும்பவில்லையாம். எனினும் அவரது ஆதரவாளர்களில் சிலரே மாவட்டத்தைப் பிரித்து துரை முருகனின் மகனும் வேலூர் எம்.பி.யு மான கதிர் ஆனந்த்தை மா.செ பதவியில் உட்கார வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

 

இராணிப்பேட்டை மாவட்டம்

 

மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு என 4 தொகுதிகள் உள்ளன. இதில் அரக்கோணம், சோளிங்கர் தொகுதிகளில் தி.மு.க. வீக்காகவே உள்ளது. இந்த மாவட்டத்தை இரண் டாக பிரித்து வன்னியர் ஒருவரை மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்பது தி.மு.க.வினர் சிலரின் கோரிக்கையாக இருக்கிறது. நாங்களும் வலிமை யாகத்தான் உள்ளோம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்பது முதலியார் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் வாதம். வலிமை குறைந்த மாவட்டம் என தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபேக்கும் தலைமையிடம் கூறியிருப்பதால், இதனைப் பிரிக்கத் தலைமையும் விரும்புகிறது.

 

அரக்கோணம் (தனி), சோளிங்கர் தொகுதிகளை கொண்டு வடக்கு மாவட்டம் என்றும், இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளை இணைத்து தெற்கு மாவட்டம் என்றும் உருவாக்க வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் கோரிக்கை. அப்படி உருவாகும்பட்சத்தில் வடக்கு மாவட்டத்தில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் அசோகன் உட்பட சிலர், அதைப் பெறத் துடிக்கிறார்கள். இரண்டு தொகுதிக்கு என்னால் மா.செ.வாக இருக்க முடியாது என மா.செ.காந்தி வேறு பதவிக்கு நகர்ந்ததால் தெற்கு மாவட்டத்திற்கு வன்னியரான குட்டி (எ) கிருஷ்ணமூர்த்தி, முதலியார் கோட்டாவில் ஆற்காடு எம்.எல்.ஏவும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஈஸ்வரப்பன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி உட்பட சிலர் களத்தில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.வில் மா.செ.வாக அரக்கோ ணம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ ரவி உள்ளார். அவர் எங்களை வளரவிடாமல் தடுக்கிறார் என வன்னியர், முதலியார் சமூகப் பிர முகர்கள் எதிர்ப்புகாட்டி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.விலும் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரான முகமது ஜான் எம்.பி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ சீனுவாசன், பெல்.கார்த்திகேயன் உட்பட சிலர் அந்தப் பதவிக்குக் காத்திருக்கிறார்கள்.

 

திருப்பத்தூர் மாவட்ட நிலவரம்

 

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது இதில் 3 தொகுதிகளை அ.தி.மு.க வென்றது. இந்த மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்க விரும்புகிறது தி.மு.க. தலைமை. மாவட்டம் பிரிக்கப்படும்போது, இந்த பகுதியில் வலிமையாகவுள்ள வெள்ளாளக் கவுண்டர் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னணியில் நிற்கின்றனர்.

 

அ.தி.மு.க தலைமையும் மாவட்டம் பிரிப்பு பற்றி யோசித்தபோது, அமைச்சர் வீரமணி, அதெல்லாம் பிரிக்கக்கூடாது என முட்டுக்கட்டை போட்டதால் திருப்பத்தூர் மாவட்டப் பிரிப்பு என்பது அங்கே தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க பிரமுகர்கள் ஆதங்கமாய்.

 

கட்சி வளர்ச்சியைக் கருதி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை பிரிக்க தி.மு.க, அ.தி.மு.க தலைமைகள் நினைக்கின்றன. ஆனால் கட்சிகளில் வலிமையாக இருக்கும் புள்ளிகள் அதனை விரும்பவில்லை. அந்த வலிமையான கரங்களை மீறி மாவட்டங்கள் பிரிக்கப்படுமா?, பிரிக்கப்படாதா? என இரு கட்சித் தொண்டர்களும் தங்களுக்குள் இப்போது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

 

Next Story

தமிழ் மொழிப்பற்று என்பது மோடியின் புதிய வித்தை!- தி.க. வீரமணி பேட்டி!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருக்குறள் நூலை வெளியிடுவதும், தமிழ்மொழி சிறந்த மொழி என்று பேசுவதும் மோடியின் புதிய வித்தை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மனிதநேய சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதற்காக அவருக்கு சேலத்தில், செவ்வாய்க்கிழமை (நவ. 5) பாராட்டு விழா நடந்தது. 


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் புள்ளையண்ணன் வரவேற்றார். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, 'வடநாட்டில் பெரியார்' என்ற நூலை வெளியிட்டு, பேசினார். 

tamil speech pm narendra modi dravida kazhagam veeramani in salem


பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது:


தமிழகத்தை மாற்ற முடியாததால், பாஜகவினர் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவரை யாராலும் அவமதிக்க முடியாது. திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. அவருடைய சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் இச்சம்பவத்தைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை.


திருக்குறள் நூலை வெளியிட்டு, தமிழ்மொழி சிறந்தமொழி என பேசிக்கொண்டு வருவது மோடியின் புதிய வித்தையாகும். வித்தைகளில் சிறந்த வித்தை மோடி வித்தைதான். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கிளர்ச்சியை தொடங்க உள்ளோம். இவ்வாறு கி.வீரமணி கூறினார். திராவிடர் கழக நிர்வாகிகள், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.