![Two arrested for stealing underground sewer pipes](http://image.nakkheeran.in/cdn/farfuture/jsiGz04JyVaLCgl2AU0HtMYEMZWRU837xEUI2i1egmw/1643614593/sites/default/files/inline-images/pipe-1.jpg)
திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாளச் சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி காந்தி மார்க்கெட் விஸ்வாஷ் நகர் பகுதியில் பாதாளச் சாக்கடைக்கான குழாய்கள் மற்றும் குழாய் வால்வுகள் இறக்கி வைத்திருந்தனர்.
இதில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் காணாமல் போய் இருந்தது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசாரிடம் அந்நிறுவனத்தின் மேனேஜர் செல்லப்பன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணையை நடத்தி உள்ளனர். அப்போது குழாய்களைத் திருடியது சின்ன மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி(33), ஜீவா நகல் எல்லை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன்(38) ஆகிய இருவர் என்று தெரியவந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.