Skip to main content

கிராம மக்களின் மோதல் எதிரொலி! ஆட்டை கொன்று நடுரோட்டில் தொங்கவிடப்பட்ட மர்ம நபர்கள்!

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
r

 

திண்டுக்கல்,  திருச்சி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் இடையே மோதல் எதிரொலியாக மர்ம நபர்கள் சிலர் ஆட்டைக் கொன்று நடுரோட்டில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் அருகே சுக்காவழி கிராமம் உள்ளது. இந்த கிராமம் திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.  இக்கிராமத்தின் ஒரு பகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும் மற்றொரு பகுதி திருச்சி மாவட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது இந்த இரு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் அவர்களை இரு பகுதிகளை சேர்ந்த பெரியவர்கள் சமாதானப்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

 

 இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின்  ஆட்டை மர்ம நபர்கள் திருடி அதை  கொன்றுள்ளனர். அதன்பின் அந்த ஆட்டை ஊர் எல்லையில் நடுரோட்டில் ஆட்டின் உடலை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சென்றுள்ளனர் இப்படி ஆட்டைக் கொன்று தலைகீழாக குச்சியில் தொங்க விட்டு
இருப்பதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே திருச்சி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அந்த ஆட்டைக் கொன்று தொங்கவிட்டு இருக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டனர்.  ஆனால் அவர்கள் தங்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.  உடனே  இரு கிராமத்தையும் சேர்ந்த ஊர் பெரியவர்கள் வழக்கம் போல் அவர்களை அழைத்து சமாதானம் செய்தனர்.

 


 இது சம்பந்தமாக ஊர் பெரியவர்கள் சிலரிடம் கேட்டபோது...‌ திண்டுக்கல் திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளில் சேர்ந்தவர்களையும் மோதவிட்டு அதன் மூலம் பலர் குளிர் காய வேண்டும் என்ற நோக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் திட்டம் போட்டு ஆட்டை திருடி கொண்டு வந்து  அதை எல்லைப்பகுதியில் தொங்கவிட்டுள்ளனர்.  இதன் மூலம் மக்களிடையே மோதலை உருவாக்க நினைத்தவர்கள்  மீது  போலீஸ் அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். 
இப்படி ஆட்டைக் கொன்று ஊர் எல்லையில் தொங்க விட்ட சம்பவம் திண்டுக்கல் திருச்சி மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.