Skip to main content

ஏற்காட்டில் டி.எம்.செல்வகணபதி கிடா விருந்து! சேலம் திமுகவில் டென்ஷன்!!

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

se


ஏற்காட்டில் திமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு மாபெரும் கிடா விருந்து வைத்து அசத்தியிருக்கிறார், அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி. திடீர் விருந்துக்கான காரணம் தெரியாததால், அவருக்கு எதிர் முகாமில் இருக்கும் மத்திய மாவட்ட திமுகவினர் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர்.

 


தமிழகத்தில் கடந்த 1991-1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதி மீது சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றார். 

 

se


இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அவர் அதிமுகவில் இருந்து விலகி, கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். 2009ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் செல்வகணபதியின் உழைப்புக்குப் பரிசாக, 2010ல் அவரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கி அழகு பார்த்தது திமுக தலைமை. நிலைமை சீராக போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த 2014, ஆகஸ்ட் 19ம் தேதி, சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

 


அதைத் தொடர்ந்து அவருடைய மாநிலங்களவை எம்.பி. பதவி பறிபோனது. எனினும், அவரை கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமித்தது திமுக. இந்நிலையில், 27.10.2017ம் தேதி, சேலத்தில் 27வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக செல்வகணபதி தரப்புக்கும், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று நள்ளிரவு மர்ம நபர்கள், செல்வகணபதி தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரில் பெட்ரோல் குண்டை வீசினர். 

 


முதலில் ராஜேந்திரன் தரப்பினர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றே யூகங்கள் கிளம்பின. காவல்துறை விசாரணையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது செல்வகணபதியின் ஆதரவாளர்தான் என்பது தெரிய வந்தது. இது, செல்வகணபதி மீது கட்சியின் தலைமைக்கு பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டுவிட்டது.

 


ஆனாலும் டி.எம்.செல்வகணபதி, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோருடன் இணக்கமாக இருந்து வருவதும், வழக்கறிஞர் ராஜேந்திரனுடன் தாமரை இலைமேல் தண்ணீர் போல இருப்பதும் நீடிக்கிறது. 

 

se


இந்நிலையில்தான், ஏற்காட்டில் உள்ள 'திலகம் நெஸ்ட்' ஹோட்டலில் அண்ணா நினைவு நாளான, கடந்த 3.2.2019ம் தேதியன்று, தனது ஆதரவாளர்களுக்கு மாபெரும் கிடா விருந்து அளித்திருக்கிறார் டி.எம்.செல்வகணபதி. இதில், வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம், பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரும் அவர்களுடைய ஆதரவாளர்களும்கூட கலந்து கொண்டு, விருந்தை சிறப்பித்துள்ளனர். விருந்துக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், செல்வகணபதி திமுகவில் இணையும்போது அவருடன் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் என்கிறார்கள், விருந்தில் கலந்து கொண்ட திமுக பிரமுகர்கள்.

 


''ஏற்காடு கொட்டச்சேடு - குப்பனூர் வழித்தடத்தில் உள்ள சூரக்குடி முனியப்பன் சாமி ரொம்பவே சக்தி வாய்ந்ததுங்க. அந்த முனியப்பனுக்கு ஏ-ழு வருஷத்துக்கு முன்னாடி டி.எம்.செல்வகணபதி ஏதோ ஒரு வேண்டுதல் வெச்சிருந்தாராம். அது பலிச்சிடுச்சுனும், அதுக்காகத்தான் கிடா வெட்டினதாகவும் சொல்றாங்க. இந்த விருந்துல ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க கலந்துக்கிட்டாங்க. ஏற்காடு ஒன்றியத்தைக் காட்டிலும் தலைவாசல், ஆத்தூர் ஆகிய ஒன்றியங்களில் இருந்துதான் அதிகளவில் விருந்துக்கு வந்திருந்தாங்க.

 


வேண்டுதல்தான் பலிச்சுடுச்சே... என்ன வேண்டுதல்னு இப்பவாவது சொல்லுங்கண்ணேனு பல பேர், செல்வகணபதிக்கிட்ட கேட்டுட்டாங்க. அவரும் சிரிச்சே மழுப்பிட்டார். கிடா மட்டுமின்றி சுவையான நாட்டுக்கோழி வருவலும் விருந்துல இடம்பிடிச்சிருந்தது. இந்த விருந்துக்கு சில நாள்கள் முன்னாடியே, கட்சிக்காரர்களை கலந்து கொள்ளும்படி, அவருடைய ஆதரவாளர் ஒருவர் எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தார். விருந்து முடிந்ததும் கட்சியினர் பலர் அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்,'' என்றார் திமுக பிரமுகர் ஒருவர்.

 


வேறு சிலரோ, சூரக்குடி முனியப்பனுக்கு, தனது அரசியல் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று நேர்ந்து கொண்டு மூன்று கருப்பு கிடாக்களை டி.எம்.செல்வகணபதி வெட்டியதாகவும், அதைத்தான் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியிருக்கிறார் என்றும் கூறினர்.

 


''திமுக தலைவர் கலைஞர் மறைவால் இந்தாண்டு கட்சி சார்பில் பொங்கல் விழாகூட கொண்டாடப்படவில்லை. அப்படியிருக்கும்போது செல்வகணபதி போன்ற கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரே, தனது ஆதரவாளர்களைத் திரட்டி கிடா விருந்து வைத்திருப்பது அதிருப்தியாகத்தான் இருக்கிறது. இந்த விருந்து எதற்காக நடந்தது, சிலர் யூகிப்பதுபோல ஏதாவது உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட விருந்தா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார் சேலம் மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர். 


இது தொடர்பாக கருத்தறிய டி.எம்.செல்வகணபதியை அவருடைய செல்போன் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.