Skip to main content

திருவண்ணாமலை களம்பூர் மூக்குபொடி பிச்சை சித்தர் மறைந்தார்! திண்டுக்கல்லில் ஜீவசமாதி அமைக்க பக்தர்கள் தீவிரம்..!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

Thiruvannamalai  beggar Siddhar passes away


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 68). இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஐந்து பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர், ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்றவர், அங்கிருந்து திடீரென தலைமறைவானார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில்தான், கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு வந்த பாக்கியநாதன், அங்கேயே தங்கிவிட்டார். இவரை இப்பகுதி மக்கள் பிச்சை சித்தர் என்றே அழைப்பர்.

 

பொதுவாக திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வெள்ளை விநாயகர் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் சுற்றித் திரிவார். ஆனால், யாருடனும் பேசமாட்டார். யார் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மாட்டார். மூக்குப்பொடி கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார். கடைகளுக்குச் சென்று சாப்பிட வேண்டும் என எதையாவது கேட்டால், கடைக்காரர்கள் கொடுத்துவிடுவார்கள். 

 

இவரால் அப்பகுதியில் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. நீண்ட தலைமுடியுடன் காலில் செருப்பில்லாமல் அழுக்குப் படிந்த காவி வேட்டி சட்டையுடன் அப்பகுதிகளில் சுற்றித் திரிவார். அப்பகுதியில் இருக்கும் கடை வாசல்களில் படுத்துக்கொள்வார். இவரிடம் தெய்வ சக்தி உள்ளதாகவும் பிச்சை சித்தர் தங்களை அடித்தால் கஷ்டங்கள் நீங்கிவிடும் எனக் கூறி பொதுமக்கள் அடிக்கடி இவரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்து ஆசிவாங்கிச் செல்வதும் வழக்கம். 

 

அதோடு பக்தர்கள் விருப்பப்பட்டு பணத்தையும் போட்டுவிட்டு போவார்கள். ஆனால், அதை எடுக்க மாட்டார். இவர் திண்டுக்கல்லில் இருப்பதை அறிந்த அவரது மனைவியும் மகள்களும் வந்து அழைத்தும், ஊர் செல்ல விரும்பாமல் திண்டுக்கல்லிலேயே தங்கிவிட்டார். இவருக்கென்று பக்தர்கள் கூட்டமே உண்டு. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பிச்சை சித்தருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமல் கடை வாசலிலேயே படுத்துவிட்டார். இந்தத் தகவல் அறிந்த இவரது மனைவி, மகள்கள் இவரை தங்களது ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக 07.05.21 அன்று திண்டுக்கல் வருகை தந்தனர். 

 

ஆனால், இவரை இங்கிருந்து அழைத்துச் செல்லக்கூடாது என கூறி பக்தர்கள் அவரது மனைவி, மகள்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேறு வழியின்றி சித்தரின் மனைவி பிரபாவதி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், இதற்குப் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். 

 

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், பிச்சை சித்தரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதனிடையே சித்தருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தகவல் திண்டுக்கல் நகர் முழுவதும் தீ போல் பரவியது. இதனையடுத்து அவரது பக்தர்கள் ஏராளமானோர் அவரை கடைசியாக காண்பதற்காக திண்டுக்கல் மெயின் ரோட்டிற்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வந்த பக்தர்களைத் திருப்பி அனுப்பினர். 

 

ஒரு கட்டத்தில் சித்தரைக் காண ஏராளமானோர் அவரைச் சுற்றி கூடினர். காவல்துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பெரும் போராட்டத்திற்குப் பின்பு சித்தரை காரில் அனுப்பி வைத்தனர். ஆனால், மறு நாளான இன்று (10.05.2021) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் கிராமத்தில் மூக்குப்பொடி சித்தர் சித்தர் மறைந்தார் அதைக் கேள்விப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள பக்தர்கள் பலர் கண்ணீர்விட்டு அழுதனர். பெரும்பாலான பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். அதோடு சித்தரை திண்டுக்கல் கொண்டுவந்து ஜீவசமாதி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் பக்தர்கள் எடுத்து வருகிறார்கள். இச்சம்பவம் திண்டுக்கல் நகர் மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.