
கடந்த மே மாதம் ஐநா சபையில் பேசுவற்காக சென்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அதிகாலை பெங்களூர் திரும்பினார். அப்போது பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்ற அவர், 52 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். வேலூர் சிறையில் இருக்கும்போதே உடல்நலக்குறைவு காரணமாக அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐநா சபையில் பேசிவிட்டு திரும்பிய அவரை பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்ததால் தனது குடும்பத்தினரை அவர் பார்க்க முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் ஐந்தரை மாதங்களுக்கு பிறகு பிறகு தனது மகளை பார்த்தார். இருவரின் கண்கலங்கிய சந்திப்பு அனைவரையும் உருக வைத்தது.