கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு மேட்டுப்பட்டியில் ‘மாலைக்கும்பிடுதல்’ விழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஊர்மக்கள் இரண்டு தரப்பாக இருந்து வருவதால் கடந்த 15 வருடங்களாக திருவிழா நடைபெறவில்லை.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கரூர் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் வந்தால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தாசில்தார் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நேற்று காலையே வந்த ஒரு தரப்பினர் எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வந்ததற்கான எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கும்படி தாசில்தாரிடம் கேட்டு கரூர் தாலுகா அலுவலகத்தில் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாளை அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தித் தருவதாகக் கூறினர். மேலும், எழுத்துப்பூர்வமாக தாசில்தார் மூலமாக கால தாமதம் ஏற்பட்டது குறித்து சம்மன் எழுதிக் கொடுத்தனர்.