Skip to main content

''தனியாருக்கு தாரை வார்ப்பதா?'' - மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

 

tangedco private issues employees tamilnadu

 

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணை 82- ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு போராட்டம் வலுத்து வருகிறது.

 

இந்நிலையில், சேலம் உடையாப்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் திங்களன்று (டிச. 21) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மணிகண்டன், சி.ஐ.டி.யு. கருப்பண்ணன், சம்மேளன நிர்வாகிகள் சேகர், ஏ.ஐ.சி.டி.யு. மணி, பொறியாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

தொ.மு.ச. நிர்வாகி மணிகண்டன் கூறுகையில், ''மின்வாரியத்தைத் தனியார்மயமாக்கக் கூடாது. இத்துறை தொடர்பாக வெளியிட்ட அரசாணை 82- ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். மின்வாரியத்தைத் தனியாருக்கு கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார். 

 

இதற்கிடையே, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரியத்தைத் தனியார்மயமாக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். 

 

மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் மின் பயன்பாடு அளவீடு, கட்டணம் வசூலித்தல், பழுதுபார்ப்பு பணிகள் பாதிக்கப்படும் சிக்கலும் உருவாகியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு’ - அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Minister Thangam thennarasu important announcement on Nellai, Thoothukudi electricity tariff extension' -

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்வதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது. மேலும், மின் உபயோகிப்பாளர்களின், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும், இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளார். 

Next Story

‘தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு’ - மின் வாரியம் முக்கிய அறிவிப்பு

Published on 27/12/2023 | Edited on 28/12/2023
Attention of the people of South District Power Board important announcement

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்கள், பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், “கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில், பணிகளைத் துரிதமாக மேற்கொண்டது. இதனால் தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி வீட்டில் மின் சுவிட்சுகளை 'ஆன்' செய்யும்போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகிலிருந்து தாங்களாகவே வயர் மூலம் மின்சாரம் எடுத்து வரக்கூடாது. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்” எனத் தெரிவித்துள்ளது.