Skip to main content

தமிழ்நாடு அரசின் மஞ்சப்பை விருது; மூன்றாம் பரிசு வென்ற புத்தக நிலையம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

tamilnadu government manjal bag award win tamil kalam book shop

 

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பொருட்களினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

 

இதனைக் கருத்தில் கொண்டு உலக அளவில் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள், மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மக்கும் தன்மை கொண்ட மஞ்சள் பை பயன்பாட்டை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான தமிழக அரசின் மஞ்சப்பை மூன்றாம் பரிசும், விருதும் இன்று (06-06-2023) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்  விருதுகளை வழங்கினர்.

 

tamilnadu government manjal bag award win tamil kalam book shop

 

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (Single Use Plastic) பைக்கு மாற்றாக நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள துணிப்பையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது தமிழ்க்களம். இந்த புத்தக நிலையத்தின் உரிமையாளர் தமிழ்க்களம் இளவரசன் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக நீண்ட காலமாக துணிப்பை இயக்கம் மூலமாக துணிப்பையை வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இளவரசன் போன்ற சமூக ஆர்வலர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படுவதற்கு இந்த விருது வழி வகுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்