Skip to main content

இப்படியும் திருமணம் செய்யலாம்..! தமிழக ஜோடியின் ஆழ்கடல் சாகசம்...

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

tamilnadu couple married under deep sea...

 

வாழ்வில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருமண நிகழ்வை, பலர் வியக்கும்படியும் சிறப்பாகவும் நிகழ்த்தவேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவது இயல்பானதே. ஆனால், சிலர் மலை உச்சியில் திருமணம், காற்றில் பறந்தபடி திருமணம், கப்பலில் திருமணம், கரோனா திருமணம் என வித்தியாசமாகவும் பிரபலமானதாகவும் தங்கள் திருமண நிகழ்வை மாற்றியிருக்கின்றனர். 

 

அந்தவகையில், தற்போது கடலுக்கடியில் நடைபெற்ற திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (29) மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா(26) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். பணியிட நண்பர்களாக இருந்தவர்கள் வாழ்கையை இணைந்தே தொடர திருமணம் செய்ய முடிவெடுத்தனர். 

 

இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவந்தன. தனது திருமணத்தை சாகசம் நிறைந்ததாக நடத்த விரும்பிய சின்னதுரை, ஆழ்கடலில் திருமணம் செய்யத் திட்டமிட்டார். அதனை, குடும்பத்தினரிடம் தெரிவித்து சம்மதத்தையும் பெற்றார். மேற்கொண்டு புதுச்சேரியைச் சேர்ந்த தனது உறவினரான ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தனின் வழிகாட்டுதலில் சின்னதுரை, ஸ்வேதா இருவரும் நீலாங்கரை கடற்பகுதியில் நான்கு நாட்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

தகுந்த பயிற்சிக்குப் பிறகு மணமக்கள் இருவரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடலுக்குள் படகில் சென்று 60 அடி ஆழத்தில் முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணச் செய்தியும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்குமுன் கேரளாவைச் சேர்ந்த ஜோடி, கடலில் 12 அடி ஆழத்தில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.