
ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துவந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இத்தகைய விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்து வந்த அந்தக் குழு, முதல்வர் ஸ்டாலினிடம் ஆய்வறிக்கையை நேற்று காலை சமர்ப்பித்தது. இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க அவசரசட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.