
தொடர் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையைத் திறந்து நீர் மட்டத்தைக் குறைக்குமாறு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், கேரள மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (27/10/2021) கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், முல்லை பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.