சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர். சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே வடுகநாதன், லேனா என இரண்டு தனியார் திரையரங்கங்கள் உள்ளது. இங்கு காலை முதல் இரவு வரை என ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. இந்த திரையரங்கிற்கு சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து படம் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த திரையரங்கில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால், அதை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு வாந்தி, தலை சுத்தல், மயக்கம் மற்றும் வயிற்று உபாதை ஏற்படுவதாக சிதம்பரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அதன்பேரில், சிதம்பரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அன்பழகன், பெண்ணாடம், மங்களூர் பகுதி மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் அந்த திரையரங்கில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திரையரங்கில் தயாரிப்பு தேதி, தயாரிப்பு முகவரி மற்றும் காலாவதி இல்லாத குளிர்பானங்கள், பாப்கான் மூலப்பொருள், பாப்கான் மசாலா பவுடர், பொட்டேட்டோ பால்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் உள்ளதா எனவும் ஆய்வு. செய்தனர்.

மேலும், உணவு பாதுகாப்பு சம்மந்தமான சான்றிதழையும், திரையரங்கு ஊழியர்களிடம் கேட்டனர். இதனையடுத்து, அங்கு இருந்த1 பாக்சில் காகிதத்தில் வைத்திருந்த பிரட் , கெட்டுப்போன பப்ஸ்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தனர். மேலும், அங்கு தயாரிப்பு தேதி உள்ளிட்டவை இல்லாமல் இருந்த தண்ணீர் கேன்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்தனர்.
மேலும், உணவு பொருட்களை அதிக விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய கூடாது என்று எச்சரிக்கை செய்து, இதுபோல் தொடர்ந்து தரமற்ற உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.