![Students struggle in Trichy Government School campus](http://image.nakkheeran.in/cdn/farfuture/PRodTFQxMyToFbpvpDe5h52lhRKEn9eSsXvmmYF3x4g/1676617056/sites/default/files/inline-images/th-4_164.jpg)
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதிய பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் கூறி இன்று காலை திடீரென பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தின் முன் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உப்பிலியபுரம் போலீசார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர். இது தொடர்பாக பேசிய பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளைப் படிப்பதற்காக இந்த பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகவும் ஆனால் பள்ளியில் ஜாதி பிரச்சனையை காரணம் காட்டி இரு பிரிவு மாணவர்களிடையே சண்டையை ஏற்படுத்தி விடுவதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பள்ளியின் தலைமையாசிரியரிடம் கேட்டதாகவும், ஆனால் அவர் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கொடுக்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு பணிபுரியும் சக ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து தங்களை இடமாற்றம் பண்ண வேண்டும். அல்லது பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.