
கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கன்டிகைப்பேரியை சேர்ந்தவர் முருகராஜ். 20 வயதான அவர் தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் தங்கி அங்குள்ள காற்றாலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர், வேப்பமரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
கன்டிகைப்பேரியில் உள்ள செங்கல் சூளையில் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும், முருகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.
இருவரும் ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்கள் மூலம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால் மனைவியை கண்டித்தார். இருப்பினும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. விவகாரம் வெளியே தெரிய வரவே முருகராஜை அப்பெண்ணின் கணவர் கண்டித்தார். இதனால் முருகராஜ் புதியம்புத்தூருக்கு வேலைக்கு வந்தார். அதன்பிறகும் அந்த பெண்ணும் முருகராஜும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர், மீண்டும் மனைவியை கண்டித்தார். தனது கள்ளக்காதலனுடன் பேச முடியவில்லையே என்று மனம் உடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்பெண் தற்கொலை செய்து கொண்ட விசயம் முருகராஜுக்கு தெரிய வந்தது. இதனை அறிந்த முருகராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் முருகராஜும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவரம் போலீசார் விசாரணையில் வெளியானது. முருகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.