Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
sterlite protest



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் தொடர் போராட்டங்களில் 13 பேர் பலியானார்கள். 
 

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 28ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.
 


இதைத் தொடர்ந்து  அந்த குழுவினர் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம், ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என கடந்த 28ந் தேதி  தெரிவிக்கப்பட்டு உள்ளது

.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்  ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்ட மன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதில் எதிர்ப்பு குழுவினர் கிருஷ்ணமூர்த்தி அரிராகவன் உள்ளிட்டோர் மற்றும் குமரெட்டியாபுரம் பண்டாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

ஆலையை மூடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தருண் அகர்வால்  தலைமையிலான குழுவினர் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர் பின்னர் அவர்கள் ஆட்சியர் பொறுப்பு வீரப்பனிடம் மனுக்களை அளித்தனர் ஆட்சியர் (பொ) இவை அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

sterlite protest


எதிர்ப்பாளர்கள் போராட்டத்தையொட்டி காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கபட்டனர்

இது குறித்து போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைத்தால் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து ஆலைக்கு ஆதரவாக நாடகமாட கூடாது. தற்போது நடந்து வரும் சம்பவங்கள் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆலை திறகப்படுமானால் தூத்துக்குடி மக்கள் வாழவே முடியாத நகரமாகிவிடும். ஆலையை திறக்க விட மாட்டோம். இதற்காக தூத்துக்குடி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் மாவட்டம் மட்டுமல்லாது போராட்டத்தை மாநில அளவில் விரிவு படுத்துவோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.