Skip to main content

’ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு செய்த இமாலயத் தவறு’- தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
s

 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:

’’13 பேரை படுகொலை செய்து அவர்களின் பிணங்களின் மேல் நின்றுகொண்டும் சூழ்ச்சி, சதி, சட்டம் வளைப்பு, உரிமைகள் மறுப்பு  ஆகியவற்றை அரங்கேற்றியும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது!  இதற்கு தமிழக அரசு துணைபோகவில்லையென்றால், இப்போதாவது உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகக் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


 

பல மாநிலங்களும் அனுமதிக்காத ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை ஜெயலலிதா அரசு அனுமதித்து தூத்துக்குடியில் அது 1996ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.

 

இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, புற்றுநோய் உள்பட உயிருக்கும் உடலுக்கும் கேடான நோய்கள் மக்களைத் தாக்கின. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட்து.

 

கடந்த மே 22ந் தேதி மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதில் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்; நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தினர். மக்களின் கொந்தளிப்பையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து மே 28ந் தேதி அதற்கு சீல் வைத்தது தமிழக அரசு.

ஆனால் இதனை எதிர்த்து, ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது அனில் அகர்வாலின் வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனம்.

 

அந்த வழக்கில், ஆலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு, அந்தக் குழு, ஆலையை மீண்டும் திறக்கலாம் என அறிக்கை அளித்தது.

ஆக, ஸ்டெர்லைட்டின் அதிபர் அனில் அகர்வால், ஆய்வுக் குழுவின் தலைவர் தருண் அகர்வால் என இரு அகர்வால்களும் ஒரே புள்ளியில் இணைந்தனர் என்றால் இதனை வியப்பாகவோ விசித்திரமாகவோ பார்ப்பதற்கில்லை.

 

தமிழக அரசு இதில் அமைச்சரவையைக் கூட்டி ஆலையை மூடுவதாக கொள்கை முடிவினை எடுத்திருக்க வேண்டும். அதையே எதிர்க்கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வலியுறுத்தினர். ஆனால் எவர் பேச்சையும் கேட்காமல், ஆலையை மூடுவதாக வெறும் அரசாணையையே பிறப்பித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் ஆலையால் ஏற்பட்ட, ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த தருண் அகர்வால் குழு, 25 நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அதனடிப்படையில் ஆலையை மீண்டும் இயக்கலாம் என்று அறிக்கை அளித்துவிட்டது.

 

ஏற்கனவே ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் குறித்தோ, அவை மேலும் ஏற்படாதவண்ணம் தடுப்பு அமைப்புகள் எதையும் ஆலை உருவாக்கவில்லை என்பது குறித்தோ தருண் அகர்வால் தன் அறிக்கையில் வெளிப்படுத்தாமல் தவிர்த்துவிட்டார் என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.

 

ஆனால் அந்த அறிக்கை சொன்னது: “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது. ஆலைக்கு சீல் வைக்குமுன், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் எதையும் அளிக்கவில்லை; நிர்வாகத்தின் தரப்பு நியாயத்தை முன்வைக்க உரிய அவகாசமும் வழங்கவில்லை. எனவே ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. ஆலையை மூட குறிப்பிட்டுள்ள காரணங்களும் உகந்ததாக நியாயமானதாக இல்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதிக்க வேண்டும்; காற்று, நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், திடக்கழிவு மேம்பாடு குறித்து குழு வழங்கும் 25 பரிந்துரைகளை நிபந்தனையாக முன்வைத்து அனுமதி வழங்கலாம்.”

 

இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு – ஸ்டெர்லைட் நிர்வாகம் இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 7ந் தேதிக்கு ஒத்திவைத்தார் தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்.

அதன்பிறகு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் என்னவென்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் தருண் அகர்வால் குழு செய்த பரிந்துரையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்கவும் ஆலை வெளியேற்றும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த வழக்கில் தங்களை ஒரு சாராராக ஏற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் பாத்திமா, வணிகர் சங்க நிர்வாகி ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி அர்ஜுனன் ஆகியோர் மனு அளித்தனர். இவர்கள், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணையை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு; தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது” என்பதைச் சுட்டிக்காட்டினர். ஆனால் இதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்க மறுத்தது; இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றாலும், முதன்மைப் பிரச்சனையாக விசாரிக்க உத்தரவிடவில்லை.

தமிழக அரசு, இந்த தருண் அகர்வால் நியமனத்தை ஆட்சேபித்திருக்க வேண்டும்; ஆனால் செய்யவில்லை. ஏன் அவரை ஆட்சேபித்திருக்க வேண்டும் என்றால், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எவரையும் தீர்ப்பாயம் ஏற்கவில்லை; அதோடு தருண் அகர்வால் ஏற்கனவே ஊழல் கறை படிந்தவர்.

மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த 28.05.2018 தேதிய அரசாணை வலுவற்றதாக உள்ளது” என்று அப்போதே சுட்டிக்காட்டியது. அதற்குப் பிறகும்கூட, அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை அமைச்சரவையின் கொள்கை முடிவாக எடுக்காததுதான் இதில் தமிழக அரசு செய்த இமாலயத் தவறு.

இப்போதும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உண்மையிலேயே அவருக்கு அந்த எண்ணம் இருக்குமானால், உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக கொள்கை முடிவினைத்தான் எடுத்திட வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
"Justice has been received in the Supreme Court" - Vaiko

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

"Justice has been received in the Supreme Court" - Vaiko

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“எத்தகைய ஆபத்திலிருந்தும் மக்களைக் காப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
We will protect people from any danger says CM MK Stalin

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பல முறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம், ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்திருந்தது.

மேலும் இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில், ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு எனக் கூற முடியாது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டிருந்தது.

We will protect people from any danger says CM MK Stalin

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

We will protect people from any danger says CM MK Stalin

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ‘தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்திலிருந்தும் மக்களைக் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.