Skip to main content

கட்டிய மனைவியை விரட்டிய கணவர் இளம்பெண்ணுடன் தலைமறைவு... போலீசார் விசாரணை

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
cuddalore

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்துள்ளது சித்தமல்லி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் 32 வயது சந்திரவேலு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது உள்ள இந்துமதி என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்காண்டுகளாக குழந்தையில்லை. இதனால் சந்திரவேலுவின் தாய் வேம்பு, தந்தை சக்கரவர்த்தி, சந்திரவேல் ஆகியோர் இந்துமதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு இந்துமதி, நாம் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இதில் யாருக்கு எந்த குறைபாடு இருந்தாலும் மருத்துவர்கள் சரி செய்வார்கள். பிறகு குழந்தை  இருக்கும் என்று கூறியதோடு கணவரை  மருத்துவர் பரிசோதனைக்கு அழைத்துள்ளார்.

 

இதற்கு சந்திரவேலு மறுப்பு தெரிவித்ததோடு அவர் தாய் தந்தையை ஆகியோருடன் சேர்ந்து இந்துமதியை தாக்கி திட்டி மிரட்டி அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இந்த நிலையை பயன்படுத்தி கொண்ட சந்திரவேலு, அவரது எதிர் வீட்டை சேர்ந்த கங்காசலம் என்பவரது 26 வயது மகள் கமலா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

அந்த கமலாவை மனைவி வீட்டில் இல்லாததை பயன்படுத்தி கொண்டு சந்திரவேலு தன் வீட்டிற்கு அழைத்து வந்து திருமணம் செய்யாமலேயே கமலாவுடன் கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த தகவல் இந்துமதிக்கு தெரியவரவே, அவர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார்.

 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த மகளிர் போலீசார், சந்திரவேலு அவரது தாயார் வேம்பு, தந்தை சக்கரவர்த்தி, சந்திரவேலுடன் தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்து வந்த கமலா ஆகிய நால்வரையும் கைது செய்வதற்காக தேடிச் சென்றுள்ளனர். அதற்குள் அவர்கள் நால்வரும் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவாகி உள்ள அவர்களை சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்