Skip to main content

“திட்டமிட்டவாறே பள்ளிகள் திறக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Schools will open on june 1 th says Minister Anbil Mahesh

 

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச் சிலைக்கு அவரது 1348வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாநகர கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  

 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும், அதேபோன்று ஐந்தாம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திட்டமிட்டவாறே திறக்கப்படும். பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார். தனியார் பள்ளி வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும். திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறந்து வைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

 

லேப்டாப் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “ பள்ளி மாணவர்களுக்கு  வழக்கம் போல சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும். பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான பாடப் புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது. பழுதடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி வேலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவி தேவைப்படுகிறது.  நபார்டு வங்கி ஒட்டுமொத்த அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கும் நிதி உதவி வழங்கப்படும். விரைவில் நிதியை பெற்று ஒரு மாத காலத்திற்குள் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி துவங்கும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்