100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரை பள்ளித் தூய்மைப் பணிகளுக்கு ஈடுபடுத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களை வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவதாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் வகுப்பு மற்றும் வளாக தூய்மைப் பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதாக சமீப காலங்களில் அதிகமாக புகார்கள் வருவதை அடுத்து தொடக்கக் கல்வி இயக்குனரகம் இந்த உத்தரவை விடுத்துள்ளது. மேலும் தேவை என்றால் தூய்மைப் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என கூறியுள்ளது. பள்ளி வளாகத்தை கொசுக்கள் இல்லாமலும், மழை நீர் தேங்காமலும், குப்பைகள் இல்லாமலும் பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.