Skip to main content

சேலத்தில் முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

salem incident police investigation

 

சேலத்தில் முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாஷா. இவருடைய மனைவி உமைபானு (45). இவர், சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி வந்தார். அரசு சார்பில் இயங்கி வரும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் மையத்தின் செயலாளராகவும், அல்-அமானத் அறக்கட்டளை என சொந்தமாக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி, வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உமைபானு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து அவருடைய கணவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகவும், நிலம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி பலரிடம் பணம் வசூலித்துக்கொண்டு ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.

 

இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் அன்பழகன், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ், அம்மாபேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சிவகாமி, எஸ்ஐக்கள் சதீஸ்குமார், கார்த்திகேயன், கார்த்தி, ஆனந்தகுமார், ரங்கராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 

சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்தனர். மேலும், அவருடைய செல்ஃபோனில் இருந்து யார் யாருக்கு அடிக்கடி பேசப்பட்டுள்ளது? அவரை அடிக்கடி தொடர்புகொண்ட நபர்கள் யார் யார்? என்பது உள்ளிட்ட விவரங்களையும் தனிப்படையினர் சேகரித்தனர்.

 

salem incident police investigation

 

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அக்தர் மகன் அக்பர் பாஷா (43) என்பவர், உமைபானுவிடம் வியாபாரம் தொடர்பாக 40 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததும், அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கேட்டபோது உமைபானு திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

 

இதனால் அவரிடம் எப்படியாவது பணத்தை வாங்கியாக வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ச் 12ஆம் தேதியன்று அக்பர் பாஷா, உமைபானு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் தெரிந்த சேலம் பொன்னம்மாபேட்டை, திப்பு நகர் ரயில்வே லைன் தெற்கு தெருவைச் சேர்ந்த பாஷா மகன் அப்சர் என்ற சொச்சோ (29), பொன்னம்மாபேட்டை மஜித் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரகுபதி (29) ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

 

உமைபானுவிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவர் பணம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அக்பர் பாஷா உள்ளிட்ட மூவரும் உமைபானுவை கை, கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். அதன்பிறகும், சுவரில் அவரது தலையை மோதச் செய்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில், அவர்கள் மூன்று பேரும் பொன்னம்மாபேட்டையில் ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், மூவரையும் புதன்கிழமை (மார்ச் 17) கைது செய்தனர். கைதான மூவரையும் சேலம் மாவட்ட 5வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் அன்பு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின்பேரில் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.