Skip to main content

குரங்குகளை துன்புறுத்திய வனச்சரகர் இடமாற்றம்! புகார் சொன்னவர் மீதே வழக்கு பாய்ந்த விநோதம்; சேலம் வனத்துறை நூதன உத்தி!!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

 

salem district yercaud monkeys forest department


சேலத்தில், குரங்குகளை துன்புறுத்தியதாக வனச்சரகர் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் மீதே பதிலுக்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவார பகுதியில் இருந்தே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான குரங்குகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், காட்டு மாடுகள் வசிக்கின்றன.

 

அடிவாரம் அருகே உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள், கல்யாண மண்டபம் ஆகியவற்றுக்குள் குரங்குகள் கூட்டமாக நுழைந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் கிளம்பின.

 

இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, குரங்குகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பிடிபட்ட குரங்குகளை கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றும்போது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

 

இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மோகன்குமார் (44) மற்றும் பொதுமக்கள், குரங்குகளை துன்புறுத்திய வனத்துறை ஊழியர்களைக் கண்டித்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கன்னங்குறிச்சி காவல்துறை வரை போகவே, அவர்கள் வந்து மக்களை சமதானப்படுத்தினர்.

 

வனத்துறை ஊழியர்கள் குரங்குகளை துன்புறுத்தியதாக மோகன்குமார், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமியிடம் நேரில் புகார் அளித்தனர்.

 

விசாரணையில், குரங்குகளை பிடிக்கும்போது உரிய விதிகளை பின்பற்றாமல் இருந்ததும், கம்பியால் அடித்து துன்புறுத்தியதும் உறுதியானது. இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணனை நாமக்கல் சோதனைச்சாவடிக்கு இடமாற்றம் செய்து மண்டல வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார். சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு பொறுப்பு அதிகாரியாக அஸ்தம்பட்டி சந்தன மரக்கிடங்கு வனச்சரகர் உமாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையே, மலை அடிவாரத்திற்கு வரும் குரங்குகளுக்கு வனச்சட்ட விதிகளை மீறி உணவு வழங்கியதாக மோகன்குமார் மீது சேர்வராயன் தெற்கு வனச்சரகர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

தவறு செய்த ஊழியர்கள் மீது புகார் கூறினால், குற்றத்தை சுட்டிக்காட்டியவர் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் புதிய உத்தியை சேலம் மாவட்ட வனத்துறை கையில் எடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.