Skip to main content

பாலியல் பலாத்கார வீடியோவில் சிக்கிய விசிக பிரமுகர் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சேலம் அருகே, ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பிரமுகர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


சேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இயங்கும் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன், இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் பொதுக்கழிப்பறையில் வாலிபர் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக வந்த புகாரின் பேரில் மோகன்ராஜை மகுடஞ்சாவடி காவல்துறையினர் கைது செய்தனர். 


அவருடைய செல்போனில் ஆய்வு செய்தபோது, பெண் ஒருவரை மோகன்ராஜ் மிரட்டியும், தாக்கியும் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. அவர் கைது செய்யப்பட்ட அதேநாளில் பல்வேறு சமூக ஊடகங்களிலும் மோகன்ராஜின் பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் பரவின. எனினும், வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து புகார்கள் ஏதும் வராததால், மோகன்ராஜை ஓரினச்சேர்க்கை புகாரில் மட்டுமே கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

salem auto driver women complaint police  court


இதற்கிடையே, பாலியல் பலாத்காரம் சம்பவம் நிகழ்ந்த இடம், மாநகர காவல் சரகத்திற்குள் வருவதால், இந்த வழக்கை மகுடஞ்சாவடி போலீசார், கொண்டலாம்பட்டி போலீசாருக்கு மாற்றினர். இந்நிலையில் மோகன்ராஜின் காமப்பசிக்கு இரையான அந்தப்பெண், அக். 1ம் தேதியன்று கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், 'நான் ஹாலோபிரிக்ஸ் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தேன். திடீரென்று எனக்கு சரியாக வேலைகள் கிடைக்காமல் போகவே குடும்பம் நடத்த முடியாத அளவுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டது. அதனால், ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தப்பணத்தை கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் மோகன்ராஜ் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார்.


ஒருநாள் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் என்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறினேன். அவரோ, பணம் தர வேண்டாம். வீட்டிற்கு வந்து போ என்று கூறினார். அதனை நம்பி வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் எனது நெற்றியில் அடித்தார். பிறகு கொன்று விடுவதாக கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துவிட்டார்.  அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து மிரட்டினார். நான் எப்போது கூப்பிட்டாலும் வந்துபோக வேண்டும். இல்லாவிட்டால் அழைக்கும்போது இந்த பாலியல் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் சிறையில் இருக்கும் மோகன்ராஜிடம், அவரை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் இன்று (அக். 2) நேரில் சார்வு செய்தனர். ஓரிரு நாளில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்