Skip to main content

அரசுப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி சீர் கொண்டு வந்து அசத்திய பொதுமக்கள்!

Published on 12/07/2018 | Edited on 13/07/2018

கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை ரூ. 2 லட்சம் செலவில் கல்விச் சீராக பொதுமக்கள் வழங்கினார்கள். கடந்த ஆண்டு இந்த பள்ளிக்கு வேன் வசதி செய்து கொடுத்தனர்.
 

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள், அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக வேன் வழங்கினார்கள். அதே போல மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தும்விதமாக இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் 19 சைக்கிள்கள், கணினி, வழங்கியதுடன் ஆங்கில பயிற்சிக்காகவும், கணினி பயிற்சிக்காகவும் 3 ஆசிரியர்கள் போன்ற வசதிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் கிராம பொதுமக்கள், முன்னால் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அனைவருக்கும் அடையாள அட்டை, போன்ற வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்தும் வந்தனர். அதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களையும் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
 

 

 


இந்த ஆண்டு 32 புதிய மாணவர்கள் சேர்க்கையுடன் 101 மாணவ, மாணவிகள் பயிலும் இந்த அரசுப் பள்ளியில் அதிகமான மாணவ, மாணவிகள் இலவச வேனில் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பள்ளி மாணவர்களின், கல்விக்கு தேவையான பொருட்கள் பற்றி ஆய்வு செய்த குழுவினர் மாணவர்களுக்கான இருக்கைகள், பீரோ, மின்விசிறிகள், மேசை, நாற்காலிகள், கரும்பலகைகள், வண்ண பலகை, பெயர் பலகை, பாய்கள், பேப்பர்கள், குடங்கள், எழுது பொருட்கள், சுகாதார பொருட்கள், முதலுதவி மருந்துகள், எழுத்துப் பயிற்சி கையேடுகள் என்று பல்வேறு பொருட்களை ரூ. 2 லட்சம் செலவில் கிராம மக்களும் குழுவினரும் இணைந்து வாங்கி திருவள்ளுவர் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக கல்வி சீர்களை பள்ளிக்கு கொண்டு வந்தனர். சீர்களுடன் வந்த பொதுமக்களை பள்ளி ஆசிரியைகள் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.
 

கல்விச் சீராக கொண்டு வரப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் விழா பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் சந்திரா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன், வட்டார வளமை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஓய்வு உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ரெத்தினம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர்களும், பொதுமக்களும் கொண்டு வந்த கல்விச் சீர் பொருட்களை பள்ளிக்காக பெற்றுக் கொண்டார்.
 

மேலும் பெற்றோர்கள், மேலாண்மைகுழு, மற்றும் கண்காணிப்பு மற்றும் ஆசிரியர்களின் செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டது. அதில், பெற்றோர்கள் தரப்பில், வரும் ஆண்டிலும் மாணவர்களுக்கு சைக்கிள், ஒவ்வொரு மாணவருக்கும் பிறந்த நாள் பரிசுகள், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் பெற்றோருர்களுக்கு பரிசுகள், மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிகளை நிறுத்திவிட்டு மாணவர்களை படிக்க சொல்லுதல், அதை கண்காணிக்க குழு அமைத்தல், வேனில் செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் பெற்றோர்களே பாதுகாவலராக செல்லுதல், மாதம் ஒரு முறை கொத்தமங்கலம் கிளை நூலகத்திற்கு மாணவர்களை வேனில் அழைத்துச் சென்று நூல்கள் படிக்க கற்றுக் கொடுத்தல், கணினி இயக்க, சதுரங்க போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள பயிற்சி அளித்தல் ஆகிய செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
 

 

 

அதே போல ஆசிரியர்கள் தரப்பிலான செயல்திட்டங்களாக முதல் வகுப்பில் மாணவர்களை தமிழ் எழுத்துக் கூட்டி படிக்க வைத்தல், 2ம் வகுப்பில் தமிழ் சரளமாக படித்தல் ஆங்கிலம் சிறு வாக்கியம் அமைத்தல், விழா அழைப்பிதழ்கள் வாசித்தல், 3 வகுப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்தல், 4ம் வகுப்பில் தமிழ் செய்தி தாள்கள் வாசிக்க பயிற்சி, 5ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலத்தில் பேச எழுத பயிற்சி, தமிழ் ஆங்கில செய்திதாள்கள் வாசிக்க பயிற்சி, கணினி பயிற்சி, கடிதம் எழுத பயிற்சி அளிப்பதாக ஆசிரியர்கள் செயல்திட்டத்தை வாசித்தனர்.

 

இந்த விழாவில் கலந்து கொண்ட ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் பேசும் போது, 

இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை அதனால் தற்போது கட்டிடம் கட்ட வேறு வழியில் ஏற்பாடு செய்கிறேன். அரசுப் பள்ளிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து கிராம மக்கள் இவ்வளவு பொருட்செலவில் தளவாடப் பொருட்கள் வழங்கி இருப்பது பெருமையாக உள்ளது. எதிர் வரும் காலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பள்ளியாக இந்த பள்ளி வளர வேண்டும். அதற்காக என்னால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் என்றார். விழாவில் முன்னால் மாணவர்கள் கிராம பொதுமக்கள், மேலாண்மைக்குழுவினர், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கடந்த மாதங்களில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் அருண் தொகுத்து வழங்கினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.