Skip to main content

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? ராமதாஸ் கண்டனம்

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
Ramadoss



மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான, மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். 
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் கடந்த 2008ஆம் ஆண்டு முறையான தேர்வுகளின் மூலம் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்களது பணியில் எந்த குறையும் காணப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை பணிநிலைப்புச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ள காரணம் அபத்தமானது மட்டுமின்றி, ஏற்க முடியாததும் ஆகும்.
 

தகுதியற்ற ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தக்கூடாது என்று கடந்த 2006ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காரணம் காட்டியும், 42 பணியாளர்களும் தகுதியில்லாமல் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று கூறியும் அவர்களைப் பல்கலைக் கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு, கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை எந்த குறையும் இல்லாமல் செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முறையான கல்வித் தகுதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பாஸ்கரன், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரையிலான இரண்டரை ஆண்டுகளில் இவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது, திடீரென அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி பணிநீக்கம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
 

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேரின் பணி நீக்கத்திற்காக நிர்வாகம் கூறியுள்ள காரணங்கள்  எதுவும் உண்மையல்ல. மாறாக அவர்களுக்கு பதில் புதிய பணியாளர்களை நியமித்தால் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் என்ற துணைவேந்தரின் துடிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் வரும் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி, ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் 8 பேராசிரியர்கள், 16 இணைப் பேராசிரியர்கள், 22 உதவிப் பேராசிரியர்கள் என 46 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அடுத்தக்கட்டமாக 63 இளநிலை உதவியாளர்களை நியமிக்கும் நோக்குடன் தான் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ஆம் ஆண்டு பாஸ்கரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரப்படுத்தி, 2016 நவம்பர் மாதத்தில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்காக மட்டும் ரூ.22 கோடி கையூட்டு வசூலிக்கப்பட்டதாகவும். இப்போதும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்ய பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 

பொதுவாக துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாக பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பது மரபு ஆகும். ஆனால், இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெறவுள்ள பாஸ்கரன் புதிய நியமனங்களை மேற்கொள்வதும் அதற்கு வசதியாக தற்காலிக பணியாளர்களை நீக்குவதும் சட்டவிரோதமானவை. பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிப்பது தான் தமது நோக்கம் என்று கூறி வரும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இந்த விஷயத்தில் தலையிட்டு, தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்களை பணி நிலைப்பு செய்து, அதன்பின்  மீதமுள்ள இடங்களை மட்டும் நேர்மையான முறையில் நிரப்ப ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது” - ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Spanish and Belgium Prime Ministers condemned says Israel's action is unacceptable

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

எகிப்தின் ரபா எல்லை பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக சேர்ந்து நேற்று (24-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசியதாவது, “சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பியா அது போன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

 

அதனை தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பேசியதாவது, “பிணைய கைதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதன்படி, உதவி பொருட்கள் காசாவுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசாவை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது. அதனால், நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்” என்று கூறினார்.  

 

 

Next Story

“தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் நீட் தேர்வுக்கு தயாராக சொல்கிறார்” - பா. வளர்மதி கண்டனம்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

திமுக அரசைக்  கண்டித்து  அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில் கே.கே.நகர் சிவன் பார்க்கில் நேற்று (28.07.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது, “தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று, மக்கள் மத்தியில் சொன்ன பொய்யான வாக்குறுதிகள். அதிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என அவரும் அவர் கட்சியைச் சார்ந்தவர்களும் எல்லா இடங்களிலும் பிராச்சாரம் செய்யும்போது மக்களிடம் கூறினார்கள்.

 

இன்றுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது அதைப் பற்றிய பேச்சே இல்லை. மேலும், மாற்றி மாற்றி பேசிவருகின்றனர். தற்போது திமுகவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்று சொல்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது அதற்காக ஒரு குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழு நடவடிக்கை எடுக்கும் என கூறுகிறார்கள். இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை மக்களிடத்தில் தெரிவித்துள்ளார்கள் என்பதைக் கண்டித்து தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள்.

 

ஆட்சிக்கு வந்ததும் பலருக்கும் வேலை தருவதாக கூறினார்கள். இதுபோன்ற பல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதம் நிறைவடைந்துள்ளது ஆனால் எதுவும் செய்யவில்லை. மேலும், இதை இந்த குறிப்பிட்ட மாதங்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வருவது கடினம்தான். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது குழு அமைத்திருக்கிறோம் என கூறுவதுதான் கண்டிக்கத்தக்கது. தற்போதைய நிலைக்கு நீட் தேர்வு ரத்து என்பது மிகவும் முக்கியமானதாகும்.” என கூறினார்